பேருந்துகளின் மிதிபலகையில் இருந்து தவறி விழும் மரணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – எவரும் பொறுப்புடன் செயற்படுவதாக தெரியவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு!

Monday, February 26th, 2024

யாழ்ப்பாணத்தில் பேருந்துகளின் மிதிபலகையில் இருந்து தவறி விழுந்து கடந்த வாரம் மாத்திரம் இரண்டு மரணங்கள் பதிவான நிலையிலும் அதனை எவரும் கருத்தில் கொண்டு பொறுப்புடன் செயற்படுவதாக தெரியவில்லை என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் குற்றச்சாட்டுகின்றனர்.

சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாண நகரில் இருந்து காரைநகர் நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்து சபை பேருந்தில் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பயணிகள் பேருந்து மிதிபலகையில் தொங்கியவாறு சென்றநிலையில் அருகில் தரித்து நின்ற வாகனத்துடன் மோதி கீழே விழுந்துள்ளனர்.

இதனை அவதானித்த அங்கிருந்த பொது மகனொருவர் எடுத்த காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் பரவிவருகிறது.

“இவ்வாறு பேருந்து மிதிபலகையில் தொங்கியவாறு சென்று விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்பு நடந்தால் யார் பொறுப்பு.

விபத்து இடம்பெற்ற பின்னர் சட்ட நடவடிக்கை எடுக்காது, விபத்து ஏற்படுவதற்கு முன்னர் இவ்வாறு பேருந்துகளில் தொங்கியவாறு சென்றால் பேருந்து சாரதி மற்றும் நடத்துனருக்கு எதிராக போக்குவரத்து பொலிஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனவும் கோரியுள்ள பொதுமக்கள், வீதிகளில் மறைந்து நின்று குற்றம் நிகழ்ந்த பின்னர் தண்டப்பணம் அறவிடும் போக்குவரத்து பொலிஸார், ஒழுங்காக கடமையை செய்தால் இவ்வாறு அசம்பாவிதங்கள் ஏற்படாது எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

இதனிடையே கடந்த 19 ஆம் திகதி அல்லைப்பிட்டியில் மூதாட்டி ஒருவரும் கடந்த 23 ஆம் திகதி நல்லூர் பகுதியில் இளைஞர் ஒருவரும் பேருந்தில் இருந்து விழுந்து உயிரிழந்தனர்.

அதிக பயணிகளை யார் ஏற்றுவது என்பதில் இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் இடையேயான போட்டி காரணமாக விபத்து, உயிரிழப்பு என்று பல அசம்பாவிதங்கள் தொடர்ந்து இடம்பெற்று  வருகின்றமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: