பெருந்தோட்டத் தொழிலாளர்களின் 1700 ரூபா வேதன அதிகரிப்பு வர்த்தமானி இரத்து!

Wednesday, July 24th, 2024

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை 1700 ரூபாவாக நிர்ணயித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி இரத்து செய்யப்பட்டுள்ளது.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை 1700  ரூபாவாக அதிகரித்துக் கடந்த ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது. பின்னர் அதனை உறுதிப்படுத்தி மற்றுமொரு வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டது.

இதனையடுத்து பெருந்தோட்ட நிறுவனங்கள் நீதிமன்றத்தை நாடியதன் அடிப்படையில் குறித்த வர்த்தமானி அறிவித்தலுக்கு உயர்நீதிமன்றம் தடையுத்தரவைப் பிறப்பித்துள்ளது.

இந்த நிலையில் குறித்த வர்த்தமானி அறிவித்தல்கள் இரத்து செய்யப்படுவதாக அறிவித்து தொழில் ஆணையாளர் நாயகம் எச்.கே.கே.ஏ.ஜயசுந்தரவினால் புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜூலை 10 ஆம் திகதியிடப்பட்ட புதிய வர்த்தமானியில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை,  பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதன விடயத்தில் அரசாங்க தரப்பினருக்கும் பெருந்தோட்ட நிறுவனங்களுக்கும் இடையே புதிய இணக்கப்பாடு ஒன்று எட்டப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், முன்னதாக முன்மொழியப்பட்ட பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த வேதனம் குறைக்கப்படலாமெனத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: