பெண் சட்டத்தரணி மீதான வழக்கு ஒத்திவைக்கப்பட்டது!

Friday, December 8th, 2017

யாழ்ப்பாணம் சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் பெண் சட்டத்தரணி சர்மினி என்பவர் மீது மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் வழக்கு விசாரணை மல்லாகம் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

குறித்த வழக்கினை எதிர்வரும் 3 ஆம் திகதிக்கு நீதிமன்று ஒத்திவைத்தது. வாள்வெட்டுக் குழுவின் தலைவன் எனக் குற்றஞ்சாட்டப்பட்ட நிஸா விக்டர் என்றழைக்கப்படும் சக்திவேல்நாதன் நிசாந்தன் (வயது 22) அண்மையில் வழக்கு விசாரணைகளுக்கு மல்லாகம் நீதிமன்றுக்கு அழைத்து வரப்பட்டபோது தப்பி ஓடினார்.

சிறிது நேரத்தின் பின்னர் தீவிர தேடுதல் வேட்டையில் அவர் கைது செய்யப்பட்டார். தப்பித்த குற்றத்திற்காக அவருக்கு மல்லாகம் நீதிமன்று ஒன்றரை வருடம் கடூழிய சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.

இந்த நிலையில் சந்தேகநபர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி சர்மினி, தனது கட்சிக்காரரை சிறைச்சாலை உத்தியோகத்தர்களே வேண்டுமென்றே தப்பிக்க விட்டார்கள் என்று கடுமையான வார்த்தைகளால் திட்டினார் எனக் கூறி அவருக்கு எதிராகத் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் சிறை அதிகாரிகள் முறைப்பாடு மேற்கொண்டிருந்தனர்.

குறித்த வழக்கு விசாரணை எடுத்துக்கொள்ளப்பட்ட போது எதிர்வரும் 3 திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.இதேவேளை மல்லாகம் நீதிமன்றப் பதிவாளரை அலைபேசியின் ஊடாக அச்சுறுத்திய குற்றச்சாட்டு விசாரணைகளும் இதே சட்டத்தரணி மீது இடம்பெற்றுவருகின்றன. இது தொடர்பான வழக்கு விசாரணை எதிர்வரும் 24 ஆம் திகதி எடுத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: