பிறப்பிக்கப்படும் சட்டதிட்டங்கள் நாட்டில் வாழும் அனைவருக்கும் பொதுவானது : அதிகாரத்தில் உள்ள எவரும் அதனை மீறமுடியாது – சுகாதார பணிப்பாளர் தெரிவிப்பு!

Tuesday, June 2nd, 2020

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் பொறுப்பு நாட்டிலுள்ள அனைவருக்கும் உள்ளது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்டுள்ள சட்டதிட்டங்கள் நாட்டில் வாழும் 22 மில்லியன் மக்களுக்கும் பொதுவானது. ஒரு குடும்பமோ அல்லது அதிகாரத்தில் உள்ள எவரும் அதனை மீறமுடியாது என சுகாதார பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவல் குறித்த அச்சுறுத்தல் நிலவுகின்ற நிலையில் சுகாதார பணிப்பகத்தின் செயற்பாடுகள் குறித்து கருத்துரைக்கும்போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில் –

நிலைமைகள் கட்டுப்பாட்டில் உள்ளது என்பதை எம்மால் உறுதிப்படுத்த முடியும். இப்போது வரையில் தனிமைப்படுத்தல் முகாம்களில் உள்ளவர்களிடம் மட்டுமே வைரஸ் தொற்று கண்டறியப்பட்டு வருகின்றது.

அதற்கும் அப்பால் வெளிநாடுகளில் இருந்து வரவழைக்கப்பட்டவர்களில் அதிகளவில் நோய் கண்டறியப்பட்டு வருகின்றது. குவைத்தில் இருந்து வருபவர்களில் பெரும்பான்மையானவர்கள் நோய் தாக்கங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

இவர்களுக்கான மருத்துவ நடவடிக்கைகளை அதிகளவில் முன்னெடுக்க வேண்டியுள்ளது. எனினும் வைரஸ் சமூக பரவலாக மாறாத வகையில் நாம் செயலாற்றி வருகின்றோம்.

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வர விருப்பம் தெரிவிக்கும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இப்போது வரையில் 123 நாடுகளில் இருந்து 42 ஆயிரத்து 522 பேர் தாம் இலங்கைக்கு வர விருப்பம் தெரிவித்துள்ளனர். இவர்களிலும் அதிகளவானவர்கள் பணியாளர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

குறுகியகால வீசா கொண்டவர்களும் உள்ளனர். எனினும் இவர்கள் அனைவரும் அந்தந்த நாடுகளில் பி.சி.ஆர் பரிசோதனை செய்த பின்னரே இலங்கைக்கு வரமுடியும் என்ற புதிய நிபந்தனைகள் இப்போது பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் இலங்கைக்குள் கொரோனா தொற்றுநோய் பரவலை கட்டுப்படுத்த நாம் எவ்வளவு முயற்சிகளை எடுத்தும் ஒரு சிலர் அவற்றை மீறி செயற்பட்டு வருகின்றமையும் அவதானிக்க முடிகின்றது.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் பொறுப்பு வெறுமனே எமக்கோ பாதுகாப்பு அதிகாரிகளுக்கு மட்டுமே உள்ள கடமை அல்ல.

நாட்டிலுள்ள அனைவருக்கும் இதில் பொறுப்புடன் செயற்படும் கட்டாயம் உள்ளது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்டுள்ள சட்டதிட்டங்கள் நாட்டில் வாழும் 22 மில்லியன் மக்களுக்கும் பொதுவானது என தெரிவித்துள்ள சுகாதார பணிப்பாளர் ஒரு குடும்பமோ அல்லது அதிகாரத்தில் உள்ள எவரும் அதனை மீறமுடியாது. அவ்வாறு மீறுவதனால் நாம் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வீணாகின்றது என்பதையும் நாம் கூறிக்கொள்ள விரும்புகின்றோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்..

Related posts: