பாடசாலை மாணவர்களுக்காக முன்னெடுக்கப்பட்ட இணையவழி கற்கை தோல்வி – இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தெரிவிப்பு!

Monday, November 23rd, 2020

நாட்டில் ஏற்பட்ட கொரேனா தொற்றின் போது இணையத்தின் ஊடாக பாடசாலை மாணவர்களுக்கு கற்பித்தல் முறை தோல்வியடைந்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தெரிவித்துள்ளது.

அச் சங்கத்தின் பொதுச் செயலாளர் மஹிந்த ஜெயசிங்க ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் தகவல் வெளியிட்ட அவர் –

தற்போதைய சூழ்நிலையில், பெரும்பாலான ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் இணையங்களுக்கான வசதிகளை கொண்டிருக்கவில்லை. அத்துடன் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் “மொபைல் சிக்னல்” என்னும் தொலைபேசியின் அலை வீச்சின் செயற்பாட்டு வலிமை மோசமாக உள்ளது.

தொடர்பு கொள்ள பயன்படுத்தப்படும் தரவுகளும் மிகவும் விலை உயர்ந்தவை மற்றும் போதுமானதாக இல்லை போன்ற காரணிகளால் இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது.

கிழக்கு மாகாணத்தில் 30 சதவிகித மக்கள், மேற்கு மாகாணத்தில் 50 சதவிகித மக்கள் ஏனைய மாகாணங்களில் 20 முதல் 40 சதவிகித மக்கள் இணைய வசதிகளை கொண்டுள்ளனர்.

எனவே கொரோனா தொற்று நிலைமை கட்டுப்படுத்தப்பட்ட நிலைக்கு வரும் வரை தொலைக்காட்சி அலைவரிசைகளின் ஊடாக பாடங்களை நடத்துவதே சிறந்த தொலைதூர கல்வி தளமாகும் என்று ஜெயசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை இணையக்கல்வியானது மாணவர்கள் மீது கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது, மேலும் அவர்கள் கையடக்கத் தொலைபேசிகள், கணணிகள் போன்றவற்றில் அடிமையாகிவிட்டனர் என்றும் ஜெயசிங்க மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: