உத்தியோகபூர்வமாக பதவி விலகினார் கோட்டாபய ராஜபக்ச – புதிய பிரதமரை தெரிவுசெய்ய நாளையதினம் நாடாளுமன்றம் கூட்டப்படும் என சபாநாயகர் அறிவிப்பு!

Friday, July 15th, 2022

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்றுமுதல் சட்டரீதியாக ஜனாதிபதி பதவியிலிருந்து உத்தியோகபூர்வமாக விலகியதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார்..

சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து ஊடகங்களுக்கு விசேட அறிவிப்பை வெளியிட்டபோது, அவரின் இந்த அறிவிப்பு வெளியானது.

தற்போதுமுதல், புதிய ஜனாதிபதியைத் தெரிவுசெய்வதற்கான அரசியலமைப்பு ரீதியான நடைமுறை இடம்பெறும்.

அந்த நடைமுறை நிறைவடையும் வரையில், ஜனாதிபதி பதவியின் அதிகாரங்கள், செயற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்கும், நிறைவேற்றுவதற்கும் அரசியலமைப்புக்கு அமைய, பிரதமர் செயற்படுவார்.

புதிய ஜனாதிபதி தெரிவானது, கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் அனைத்துக் கட்சிகளின் தலைவர்களுக்கு தாம் அறியப்படுத்தியதற்கு அமைய, இடம்பெறும் என சபாநாயகர் அறிவுத்துள்ளார்.

இந்த ஜனநாயக முறைமைக்கு, உச்சப்பட்ட ஒத்துழைப்பு வழங்குமாறு கட்சித் தலைவர்களிடமும், அரச அதிகாரிகளிடமும், பாதுகாப்புத் தரப்பினரிடமும் சபாநாயகர் கோரியுள்ளார்.

அமைதியான சூழலில், அனைத்து பொறுப்பானவர்களின் ஒத்துழைப்புடன், 7 நாட்கள் என்ற குறுகிய காலத்தில் இந்த நடைமுறைகளை நிறைவுசெய்ய எதிர்பார்ப்பதாகவும் சபாநாயகர் அறிவித்துள்ளார்.

இதற்கமைய, நாளையதினம் நாடாளுமன்றம் கூட்டப்பட உள்ளதாகவும், அனைத்து உறுப்பினர்களும் பங்கேற்குமாறும் சபாநாயகர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இராஜினாமா கடிதத்தை சபாநாயகர் இன்று உத்தியோகபூர்வமாக அறிவித்ததையடுத்து புதிய ஜனாதிபதியை நியமிக்கும் வரை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவி வகிக்க வேண்டும் எனவும் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் தெரிவித்துள்ளார்.

மேலும் பிரதமரின் பணிகளை மேற்பார்வையிட அமைச்சர் ஒருவரை நியமிக்க வேண்டும் எனவும் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் சிங்கள ஊடகமொன்றுக்குத் தெரிவித்தார்.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் படுகொலையின் பின்னர் வெற்றிடமான ஜனாதிபதி பதவிக்கு அப்போதைய பிரதமர் டி.பி.விஜேதுங்க நியமிக்கப்பட்டார். அதன்படி அப்போது சபைத் தலைவராக இருந்த ரணில் விக்கிரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: