பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம்!

Saturday, February 20th, 2021

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் அழைப்பின் பேரில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் 2021 பெப்ரவரி 23 – 24 வரை இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.

பிரதமர் இம்ரான் கான் தனது விஜயத்தின் போது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருடன் இருதரப்பு சந்திப்புக்களில் கலந்து கொள்ளும் அதே நேரத்தில், வர்த்தக மற்றும் முதலீட்டு மன்றம் மற்றும் விளையாட்டு இராஜதந்திர முயற்சி உட்பட பல உயர்மட்ட ஈடுபாடுகளும் திட்டமிடப்பட்டுள்ளன.

உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, பெப்ரவரி 23 ஆம் திகதி அலரி மாளிகையில் இடம்பெறவுள்ள பரஸ்பரம் நன்மை பயக்கும் இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் நிகழ்விற்கு இலங்கை மற்றும் பாகிஸ்தான் பிரதமர்கள் இருவரும் தலைமை தாங்குவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டிற்கான தனது முதலாவது வெளிநாட்டு உத்தியோகபூர்வ விஜயத்தில், முக்கியமாக ஆடை மற்றும் அணிகலன், மருந்துப் பொருட்கள், விவசாய உணவுப் பொருட்கள், விளையாட்டுப் பொருட்கள், இரத்தினங்கள் மற்றும் நகைகள், வாகனப் பாகங்கள், தகவல் தொடர்பாடல் தொழினுட்பம், நிர்மானப் பொருட்கள் மற்றும் சத்திர சிகிச்சை உபகரணங்கள் போன்றவற்றிலான பாகிஸ்தானின் வர்த்தகத் தலைவர்களைக் கொண்ட ஒரு உயர் அதிகாரமுடைய வர்த்தக மற்றும் முதலீட்டு தூதுக்குழுவுடன் பிரதமர் இம்ரான் கான் வருகை தரவுள்ளார்.

வெளிநாட்டு அமைச்சர் மக்தூம் ஷா மெஹ்மூத் குரேஷி, பிரதமரின் வணிக ஆலோசகர் அப்துல் ரசாக் தாவூத், வெளிவிவகார செயலாளர் சொஹைல் மெஹ்மூத் மற்றும் பாகிஸ்தான் அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகளும் பிரதமர் இம்ரான் கானுடன் இந்த விஜயத்தின் போது இணைந்திருப்பர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: