பருத்தித்துறையில் 48 பேர் உட்பட வடக்கில் 69 தொற்றாளர்கள் நேற்று அடையாளம்!

Friday, July 16th, 2021

பருத்தித்துறை மருத்துவ அதிகாரி பிரிவில் 48 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் நேற்று 69 தொற்றாளர்கள் புதிதாக நேற்று அடையாளம் காணப்பட்டனர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், யாழ். போதனா மருத்துவமனை ஆய்வு கூடங்கள் மற்றும் பருத்தித்துறை நகரத்தில் நடத்தப்பட்ட எழுமாறான அன்டிஜென் பரிசோதனையிலுமே இந்த விபரங்கள் வெளியாகின.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஆய்வுகூடத்தில் நேற்று 234 பேரின் மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதில் 42 பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டனர். இதில், 40 பேர் பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்தவர்களாவர். மற்றைய இருவரும் வேலணை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்தவர்களாவர்.

மேலும் யாழ். போதனா மருத்துவமனையின் ஆய்வுகூடத்தில் 407 பேரின் மாதிரிகள் பி. சி. ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதில், 22 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இவர்களில் 20 பேர் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்களாவர். ஒருவரின் இடம் வெளியிடப்படவில்லை. மற்றொருவர் பூந்தோட்டம் தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தப்பட்டவராவார்.

தொற்றாளர்களான 20 பேர்களில், 6 பேர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையைச் சேர்ந்தவர்களாவர். இவர்களில் ஒருவர் பொலிஸ் அதிகாரியாவார். தவிர, சண்டிலிப்பாய் மருத்துவ அதிகாரி பிரிவில் 3 பேர், பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் 2 பேர், உடுவில் மருத்துவ அதிகாரி பிரிவில் ஒருவர், பலாலியில் ஒருவருமாக யாழ். மாவட்டத்தில் 61 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்.

நேற்றையதினம் முல்லைத்தீவு சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 4 பேரும், மன்னாரில் 2 பேரும், வவுனியாவில் ஒருவரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர்.

இதேவேளை, பருத்தித்துறை நகரத்தில் நேற்று எழுமாறாக நடத்தப்பட்ட அன்ரிஜென் பரிசோதனையில் 6 பேர் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts: