பயணத் தடை தொடர்பில் எடுக்கப்பட்ட முடிவில் மாற்றங்கள் வரலாம் – இராணுவ தளபதி தெரிவிப்பு!

Sunday, May 30th, 2021

நாட்டின் தற்போதைய சூழ்நிலையில், அடுத்த வாரம் ஏற்படும் சூழலை ஆராய்ந்து நிலைமைகள் மோசமாயின் 7 ஆம் திகதி பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் தீர்மானத்தில் மாற்றங்கள் ஏற்படுத்த வாய்ப்புக்கள் உள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

மேலும் கொரோனா தொற்றுக்கள் அதிகரித்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் மரணிப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், எதிர்வரும் 7ஆம் திகதியின் பின்னரும் பயணக்கட்டுப்பாடுகளை நீடிக்க வேண்டும் என சுகாதார துறையினர் வலியுறுத்தி வரும் நிலையில் அதற்கான தீர்வுகள் தொடர்பில் தெரிவிக்கும்போதே இராணுவத் தளபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில் –

தொடர்ச்சியாக பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட வேண்டும் என சுகாதார துறையினர் வலியுறுத்தி வருகின்றனர். அதற்கமைய ஒரு சில முடிவுகள் எடுக்கப்பட்ட போதிலும் மக்களையும் கருத்திற் கொண்டு பயணக்கட்டுப்பாடு தளர்வுகளும் ஏற்படுத்தப்பட்டன.

எனினும் கடந்த 25 ஆம் திகதி மக்கள் தமது தேவைகளுக்காக அவதிப்பட்டனர். இதன்போது மக்களை குறைகூற நாம் விரும்பவில்லை. ஏனைய நாடுகள் போன்று அல்லாது எமது மக்கள் மிகவும் பொறுமையாக அர்ப்பணிப்புடன் எமக்கு ஒத்துழைப்புக்களை வழங்கி வருகின்றனர். அதனை நாம் ஏற்றுக்கொண்டாக வேண்டும்.

எனினும் மக்கள் தமது பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்பதையே நாம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றோம். நாட்டின் நிலைமைகள் குறித்து வைத்திய நிபுணர்கள் தொடர்ச்சியாக ஆய்வுகளையும் கண்காணிப்புக்களையும் மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் கூறும் காரணங்களை நாம் ஏற்றுக்கொண்டு அதற்கேற்றால் போல் தீர்மானங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றோம். அவ்வப்போது தளர்வுகளை ஏற்படுத்தாது இரண்டு வாரங்கள் தொடர்ச்சியாக நாட்டினை முடக்க வேண்டும் என இறுதியாக கூடிய செயலணிக் கூட்டத்திலும் வைத்திய நிபுணர்கள் வலியுறுத்தினர்.

எனவே அவர்களின் ஆய்வுகள் தரவுகள் கோரிக்கைகளை கருத்திற்கொண்டு கடுமையான தீர்மானம் ஒன்றை எடுக்க நேர்ந்தது. அதற்கமைய 7ஆம் திகதி அதிகாலை 4 மணி வரையில் தொடர்ச்சியாக பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான தீர்மானங்களை எடுக்கையில் நாம் மக்களை கருத்திற் கொண்டுள்ளோம். விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர்கள் சகலருடனும் கலந்துரையாடி மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நடமாடும் வர்த்தக செயற்பாடுகள் மூலமாக மக்களுக்கான அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொடுக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


வவுனியா நகர்பகுதியில் மூடப்பட்ட பாடசாலைகள் நாளைமுதல் ஆரம்பம் - முடக்கப்பட்டுள்ள சில பகுதிகளும் நாளை ...
புதிய சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டால் உள்ளூராட்சி தேர்தல் - அமைச்சர் தினேஷ் குணவர்த்தன அறிவிப்பு...
வடக்கு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு - வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூ...