பணம் செலுத்தப்பட்ட பின்னரே எரிபொருளை விநியோகம் – அகில இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள் சங்கம் தெரிவிப்பு!

Wednesday, June 15th, 2022

இன்றுமுதல் முன்பதிவுகளுக்கு அமைய, கொடுப்பனவு செலுத்தப்பட்ட பின்னர் மாத்திரம், எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருளை கொண்டுசெல்லும் புதிய முறைமை நடைமுறைப்படுத்தப்படுவதாக, அகில இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு தற்போது வழங்கப்பட்டுள்ள காசோலை வசதி உடனடியாக நிறுத்தப்பட்டு, பணம் செலுத்தப்பட்ட பின்னர் எரிபொருளை விநியோகிக்கும் முறைமையே நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக அந்த சங்கத்தின் இணைச் செயலாளர் சாந்த சில்வா குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய, எரிபொருள் கிடைக்கப்பெற்றதன் பின்னர், காசோலை மூலம் ஒரே தடவையில் இலங்கை கனியவள கூட்டுத்தாபனத்திற்கு பணத்தை செலுத்தும் முறைமை கைவிடப்பட்டதுடன், எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் கிடைப்பது மேலும் வரையறைக்கு உள்ளாகும்.

எந்தெந்த எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் விநியோகிக்கப்படுகிறது என்பது தொடர்பான தகவல்கள், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளன. அந்த எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு மாத்திரமே எரிபொருள் விநியோகிக்கப்படும்.

எனவே, எல்லா எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் பொதுமக்கள் அவசியமற்ற முறையில் வரிசைகளில் காத்திருப்பதில் அர்த்தமில்லை என்ற நிலையே தற்போது உள்ளதாக அகில இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள் சங்கத்தின் இணைச் செயலாளர் சாந்த சில்வா குறிப்பிட்டுள்ளார்.

இதேநேரம், விலை சூத்திரத்துக்கு அமைய, எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்வதற்கான கணிப்பீட்டுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் மாபா பத்திரண தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, 2 வாரங்களுக்கோ அல்லது மாத்திற்கோ ஒரு முறை எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளக்கூடிய நிலை உள்ளது.

எவ்வாறிருப்பினும், விலை சூத்திரத்தை அமுலாக்கி, எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படும் தினம் இதுவரையில் உறுதியாக தீர்மானிக்கப்படவில்லை என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் மாபா பத்திரண தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

Related posts: