பணம் அறவிடுவதைத் தடுப்பதற்கு மீண்டும் சுற்றுநிருபத்தில் திருத்தம் – கல்வி அமைச்சர்!

Friday, February 8th, 2019

பெற்றோர்கள் பணம் சேர்த்து அதிபர்களுக்கு வழங்கிவருகின்றனர். இதனைத் தடுப்பதற்கு விரைவில் சுற்றுநிருபம் ஒன்றை வெளியிடுவோம் என கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.

மாணவர்களிடமிருந்து பணம் அறவிடுவதைத் தடுக்கும் வகையில் 2015 இல் சுற்றுநிருபம் வெளியிட்டோம். இதன் மூலம் மாணவர்களிடம் பணம் சேர்ப்பதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. 2017 இல் இந்த சுற்றுநிருபம் திருத்தப்பட்டது.

அதாவது பணம் அறவிடுவதாயின் தேசிய பாடசாலையாயின் கல்வி அமைச்சினதும் மாகாண பாடசாலையாயின் மாகாண அமைச்சின் செயலாளரினதும் அனுமதியைப்பெற வேண்டும்.

ஆனால் தற்போது பெற்றோர் பணம் சேர்த்து அதிபரிடம் வழங்கும் நிலை காணப்படுகின்றது. இதனையும் அனுமதிக்க முடியாது. அதிபர்களுக்குத் தெரிந்தே இவ்வாறு பணம் சேர்க்கப்படுகின்றது.

பெற்றோர் சேர்க்கும் பணத்தைப் பாடசாலை நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்த முடியாது. அதனால் சுற்றுநிருபத்தை மாற்ற இருக்கின்றோம்.

அத்துடன் 10 வருடங்களுக்கு மேலாக ஒரே பாடசாலையில் கற்பித்த ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்கும் நடைமுறை தொடர்ந்து செயற்படுத்தப்படுகின்றது. இந்த நடைமுறை தேசிய பாடசாலைகளில் முழுமையாக முன்னெடுக்கப்படுகின்றது.

ஆனால் மாகாண பாடசாலைகளில் இது முழுமையாகச் செயற்படுத்த எமக்குத் தலையிட முடியாதுள்ளது. என்றாலும் ஆசிரியர் பற்றாக்குறையை தீர்க்க மாகாண சபைகளுடன் நாங்கள் கலந்துரையாடி நடவடிக்கை எடுக்க இருக்கின்றோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: