படகை மீட்க, இந்தியாவிலிருந்து வந்த படகின் உரிமையாளரும் சிறையில்!

Thursday, March 21st, 2024

இலங்கையில் பிடிபட்ட தமிழக கடற்றொழிலாளர்களின் படகை மீட்க, இந்தியாவிலிருந்து விமானம் மூலம் இலங்கைக்கு வந்த படகின் உரிமையாளரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மன்னார் கடற்பரப்புக்குள் இந்த ஆண்டு ஜனவரி மாதம் எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்ட வேளை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் மூலம் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட தமிழக கடற்றொழிலாளர்கள் பின்னர் விடுவிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், அவர்களின் படகுகள் நீதிமன்ற உத்தரவில் தடுத்து வைக்கப்பட்டிருந்தன. அந்தப் படகுகளுக்கான விசாரணை நேற்றையதினத்துக்குத் (20) திகதியிடப்பட்டிருந்தது.

இவ்வாறு திகதியிடப்பட்ட இரு படகுகளின் வழக்கு விசாரணை நேற்று இடம்பெற்றபோது படகுகளை மீட்டுச் செல்லும் நோக்கில் உரிமையாளர்கள் இருவரும் சட்டத்தரணிகள் மூலம் மன்னார் நீதிமன்றில் பிரசன்னமாகியிருந்தனர்.

முதல் படகின் வழக்கு முதலில் எடுக்கப்பட்டபோது வழக்கு விசாரணை இன்றையதினத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.

அதேசமயம், மன்றில் பிரசன்னமான படகின் உரிமையாளரை இன்றையதினம் வரை விளக்கமறியலில் வைக்குமாறும் மன்னார் நீதிமன்றம் கட்டளையிட்டது.

இதற்கமைய தமிழகம், இராமநாதபுரம், பாம்பனைச் சேர்ந்த படகு உரிமையாளறே இவ்வாறு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மேலும், இரண்டாவது படகின் உரிமையாளரும் நீதிமன்றத்துக்கு வருகை தந்தபோதும் முதலாம் வழக்கின் உரிமையாளருக்கு விளக்கமறியல் உத்தரவு வழங்கப்பட்ட நிலையைக் கருத்திலகொண்டு மற்றைய வழக்கில் மன்றில் முன்னிலையாகாமல் தவிர்த்து, அவர் வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:

அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய நாணயத்தாள், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் ஒப்படைக்கப்பட்டது!
தாய்நாட்டிற்கு திரும்பிய பின்னர் ஓய்வூதியத்தை பெற்றுக்கொள்ள வாய்ப்பளிக்கவும் - இத்தாலியில் வாழும் இல...
நாட்டில் காணப்படும் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் இன்று ஆரம்பமானது கல்வி பொதுத் தராதர சாதாரண தர...