நெடுந்தீவில் 400 இற்கு மேற்பட்ட சிறார்களுக்கு போசாக்கில்லை!

Wednesday, June 20th, 2018

நெடுந்தீவுப் பிரதேசத்தில் சுமார் 400 இற்கும் மேற்பட்ட சிறார்கள் போசாக்கு குறைபாடுகளுடன் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

யாழ் மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய பிரதேசமாக காணப்படும் நெடுந்தீவு கடற்பகுதிகளில் பிடிக்கப்படுகின்ற கடலுணவுகள் உடனடியாகவே வெளியிடங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது.

அதுமட்டுமன்றி தோட்டச் செய்கைகள், இலைக்கறி வகைகளின் உற்பத்திகள் மேற்கொள்ளப்படாமை, உழுந்து, பயறு, கௌபி போன்ற அவரையினப் பயிர்களின் உற்பத்தியின்மை போன்ற காரணங்களால் நெடுந்தீவு பிரதேசத்தில் கீரை வகைகள், கிழங்கு வகைகள், தானிய வகைகள் இல்லாத நிலை காணப்படுகின்றது.

இவற்றை நெடுந்தீவுக்கு வெளியே யாழ்ப்பாணத்தில் அல்லது வேறு பிரதேசங்களில் பணத்தைச் செலவு செய்து பெற்றுக்கொள்ளக்கூடிய வசதிகள் இல்லாத நிலை காணப்படுவதாகவும் இதனால் நெடுந்தீவு பிரதேசத்தில் தொடர்ந்தும் போசாக்கு மந்த நிலையில் காணப்படுகின்றது என பல்வேறு தரப்பினரும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கடந்த ஆண்டுகளில் போசாக்கு குறைபாடான சிறுவர்கள் அதிகளவில் காணப்பட்டாலும் அந்த நிலமை தற்போது மாறியுள்ள போதும் சுமார் 400 இற்கும் மேற்பட்ட சிறார்கள் போசாக்கு மந்த நிலையில் காணப்படுவதாக பல்வேறு தரப்புக்களும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Related posts: