நாட்டுக்கு தேவையான விதைகளை உற்பத்திசெய்ய முடியாவிட்டால் விவசாய அமைச்சினால் பயனில்லை – இறக்குமதிக்குத் தடை – உள்நாட்டு உற்பத்திக்கு இடப்பட்டது அடித்தளம் என்கிறார் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே!

Friday, November 27th, 2020

மூன்று வருடங்களில் நாட்டுக்கு தேவையான வெங்காயம், உருளைக் கிழங்கு மற்றும் மிளகாய் என்பவற்றை உள்நாட்டில் உற்பத்தி செய்வதற்கு தேவையான அடித்தளம் இடப்பட்டுள்ளதாக விவாசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் விவசாய அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது,

விவசாயிகள் தொடர்பான தகவல் களஞ்சிய மொன்றை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விவசாயிக்கு நிர்ணய விலையொன்றை வழங்குவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

நெல் மேலதிக அறுவடை கிடைக்கிறது. விவசாய உற்பத்தி இறக்குமதிகளை மட்டுப்படுத்தி உள்நாட்டில் அவற்றை உற்பத்தி செய்ய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

மிளகாய், கிழங்கு, வெங்காயம் என்பன கடந்த அரசில் அதிகளவு இறக்குமதி செய்யப்பட்டன. மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் விவசாய இறக்குமதிகள் குறைக்கப்பட்டன.

விதை நெல் உற்பத்தி செய்வதற்காக தனியாக மூன்று கிராமங்கள் உருவாக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இறக்குமதியில் தொடர்ந்து தங்கியிருக்க நாம் தயாரில்லை. இவற்றுக்காக 70 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

மூன்று வருட காலத்தினுள் நாட்டுக்கு தேவையான உருளைக் கிழங்கு, வெங்காயம், மிளகாய் என்பவற்றை உள்நாட்டில் உற்பத்தி செய்ய இருக்கிறோம்.

விதை மாபியா காணப்படுகிறது. எமது நாட்டுக்கு தேவையான விதைகளை இங்கு உற்பத்திசெய்ய முடியாவிட்டால் விவசாய அமைச்சினால் பயனில்லை. விவசாயிகளுக்கு தேவையான பசளைகளை அரசாங்கம் வழங்கி வருகிறது.

அடுத்த வருடம்முதல் மரக்கறி வகைகளை போக்குவரத்து செய்ய ரயில் சேவையை பயன்படுத்த இருக்கிறோம். குளிரூட்டி வசதிகளும் இதில் அளிக்கப்படும்.

விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டை ஏற்கிறேன். மூன்றாம் தரப்பினர் இருப்பதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்’தக்கது.

Related posts: