நாடளாவிய ரீதியில் மிக மோசமான நிலையில் சுமார் 30 பாலங்கள் –- அமைச்சர் பந்துல குணவர்தன சுட்டிக்காட்டு!

Wednesday, November 1st, 2023

சங்குப்பிட்டி பாலம் உட்பட நாடளாவிய ரீதியில் மிக மோசமான நிலையில் சுமார் 30 பாலங்கள் காணப்படுவதாக ஊடகத்துறை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அவ்வாறு இனங்காணப்பட்டுள்ள பாலங்களில் சில தற்போது தற்காலிக திருத்தங்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. மிக மோசமாக பாதிப்படைந்துள்ள பாலங்களை புனரமைப்பதற்கு பாரிய நிதி தேவையாக உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அமைச்சர் –

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நெடுஞ்சாலைகள் பல மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. அவற்றில் பல பாலங்களும் காணப்படுகின்றன. அவற்றைப் புனரமைப்பு செய்ய வேண்டியுள்ளது. அதற்கான நிதி கோரப்பட்டுள்ளது. அரசாங்கத்திற்கு இதுவரை 2000 பில்லியனை விட வருமானத்தை சம்பாதித்துக் கொள்ள முடியாமல் உள்ளது.

அரசாங்கத்திற்கு கிடைக்கும் பற்றாக்குறையான வருமானத்திலேயே இவற்றுக்கும் நிதி ஒதுக்க வேண்டியுள்ளது. இந்த நிலையில்தான் பாலங்கள், நெடுஞ்சாலைகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றுக்கு பெருந்தொகை பணம் தேவைப்படுகிறது. அவற்றை உடனடியாக மேற்கொள்வதற்கு பணம் எங்கே உள்ளது? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: