நாச்சிக்குடாவில் தனியான தமிழ் பாசாலையை அமைத்து தருமாறு பெற்றோர்கள் கோரிக்கை

Wednesday, May 18th, 2016

நாச்சிக்குடா கிராமசேவகர் பிரிவின் கீழ் வரும் அன்னைவேளாங்கண்ணி, நல்லாயன் தேவாலய பகுதி, கரடிக்குன்று, ஜேம்ஸ்புரம் ஆகிய பகுதிகளை சேர்ந்த தமிழை தாய்மொழியாக கொண்ட குடும்பங்கள் தமது பிள்ளைகளின் கல்விக்கு தனியான தமிழ் கலவன் பாடசாலையொன்றை அமைத்து தருமாறு பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை விடுத்துள்ளன.

நாச்சிக்குடா கிராமத்துக்கென இருந்துவந்த ஒரேயொரு பாடசாலை முஸ்லிம் பாடசாலையாக மாற்றப்பட்டதை தொடர்ந்து அங்குவாழும் ஏனைய தமிழ் குடுமபங்கள்; தமது பிள்ளைகளின் சீரான கல்விக்கு தனியான தமிழ் பாடசாலை யொன்றை கோரியுள்ளன.

முஸ்லிம் மக்களுக்கான நோன்பு அறிவிக்கப்படும் காலங்களில் 40 நாட்கள் தொடர்ந்து விடுமுறை அறிவிக்கப்படுவதும் வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் 12 மணியுடன் பாசாடசாலை முடிவடைவதும் தமது பிள்ளைகளின் சீரான கல்வியை பாதிப்பதாக அங்கு கல்வி பயிலும் தமிழ் பிள்ளைகளின் பெற்றோர்கள் தமது முறைப்பாட்டில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதுதவிர முஸ்லிம் பாடசாலையாக இது இருப்பதால் தமது தாய்மொழிக்கான கல்வியும் தமது பிள்ளைகளின் மதம்சார்ந்த கல்வியும் எதிர்காலத்தில் பாதிக்கப்படலாம் என்கிற சந்தேகங்களும் இப்பெற்றோர்களின் மத்தியில் எழுந்துள்ளன.

இந்த நிலமைகளை கருத்தில் கொண்டு தமிழ் பிள்ளைகளுக்கான தனியான பாடசாலையொன்றை நிறுவிக்கொள்வது எதிர்காலத்தில் தமது பிள்ளைகளின் கல்வியை ஆரோக்கியமாக தொடர்வதற்கு  வழிவகுக்கும் என்ற அபிப்பிராயத்தையும் தமிழ் பெற்றோர்கள் வெளியிட்டுள்ளனர்.

தற்சமயம் முஸ்லிம் பாடசாலையில் கல்வி பயிலும் தமிழ் மாணவர்களின் எண்ணிக்கை இருமடங்கு கூடுதலாக இருப்பதையும் கவனத்திலெடுத்து தனியான பாடசாலைக்கான தமது கோரிக்கையை மேலான கவனத்தில் கொள்ளுமாறும் டக்ளஸ் தேவானந்தாவுக்கு எழுதிய தமது மகஜரில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Related posts: