தொழில் துறைகளை ஊக்குவித்து மக்களுக்கான பொருளாதார வளங்களை பலப்படுத்தவேண்டும் – ஈ.பி.டி.பியின் தவிசாளர் மித்திரன்.
Thursday, June 14th, 2018யுத்தம் காரணமாக எமது பிரதேசங்களில் இருந்த அனைத்து தொழில் துறைகளும் அழிந்துவிட்டுள்ள நிலையில், அவற்றை மீளக் கட்டியெழுப்புவதற்கான முயற்சிகள் போதியளவானதாக முன்னெடுக்கப்படாதுள்ள நிலைமையே காணப்படுகின்றது.
இந்நிலையில் எமது பகுதிகளில் மக்களுக்கு வாழ்வாதாரங்களை ஈட்டிக் கொள்வதற்கு இருக்கின்ற வாய்ப்புக்களை பெற்றுக்கொடுப்பதற்கு முடியுமானவரை நாம் அர்ப்பணிப்புடன் உழைக்கவேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தவிசாளரும் கட்சியின் சர்வதேச அமைப்பாளருமான மித்திரன் தெரிவித்துள்ளார்.
வவுனியா மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த தவிசாளர் அப்பகுதியின் நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்தறிந்தபின்னர் வவுனியா மாவட்ட கட்சியின் நிர்வாக செயலாளர் மற்றும் முக்கியஸ்தர்களுடனான சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில் –
கடந்தகாலங்களில் எமது கட்சி மீது சுமத்தப்பட்ட அவதூறான குற்றச்சாட்டுக்கள் எல்லாம் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டவை என்பது இன்று நீதிமன்ற விசாரணைகளுக்கூடாக வெளிவந்து கொண்டிருக்கின்றது. இதனூடாக நாம் நிரபராதிகள் என்பது இன்று நிரூபணமாகியுள்ளது.
தமிழ் அரசியல் தலைமைகளினது இவ்வாறான பிற்போக்குத்தனமான போக்குகளும் சிந்தனைகளுமே இன்று எமது மக்களை கையேந்து நிலைக்கு இட்டுச் சென்றது. இந்த அவலத்திலிருந்து மக்களை மீட்கவேண்டும் என்பதே எமது கட்சியினதும் அதன் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவினதும் நிலைப்பாடாக உள்ளது.
அந்தவகையில் அரசியல் தீர்வுக்கான முன்முயற்சிகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்ற தருணத்தில் தொழில் துறைகளை ஊக்குவித்து மக்களுக்கான பொருளாதார வளங்களை பலப்படுத்தும் முன்னெடுப்புக்களையும் சமாந்தரமாக முன்னெடுக்க வேண்டும் என்பதே எமது நோக்கமாக உள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
குறித்த சந்திப்பின் போது கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம், கட்சியின் வவுனியா மாவட்ட நிர்வாக செயலாளர் திலீபன் மற்றும் கட்சியின் குறித்த மாவட்ட முக்கியஸ்தர்கள் பலர் உடனிருந்தனர்.
Related posts:
|
|