தொடர்ந்தும் நட்டத்தை சந்தித்து வரும் அரச ஊடகங்கள் – ஊடக விவகாரங்களுக்கான அமைச்சர்களின் ஆலோசனைக் குழுவில் தகவல்!

Thursday, December 28th, 2023

இலங்கை தொலைக்காட்சி கூட்டுத்தாபனமும், இலங்கை வானொலி கூட்டுத்தாபனமும் தொடர்ந்தும் நட்டத்தை சந்தித்து வருவதாக ஊடக விவகாரங்களுக்கான அமைச்சர்களின் ஆலோசனைக் குழுவில் தெரியவந்துள்ளது.

போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில்  நாடாளுமன்றத்தில் குழு கூடியபோதே குறித்த விடயம் தெரிய வந்துள்ளது.

2015 ஆம் ஆண்டின் புள்ளிவிவரங்களை முன்வைத்த தலைவர், இந்த அலைவரிசைகள் எவ்வாறு உயிர்ச்சக்தியை இழந்துவிட்டன என்பதை சுட்டிக்காட்டினார்.

அதன்படி, 2023ஆம் ஆண்டில் இலங்கை தொலைக்காட்சி கூட்டுத்தாபனம் 277 மில்லியன் ரூபா நட்டத்தையும், 2023ஆம் ஆண்டில் இலங்கை வானொலி கூட்டுத்தாபனம் 457 மில்லியன் ரூபா நட்டத்தையும் சந்தித்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அலைவரிசைகளுக்கான நிதியை திறைசேரி வழங்குவது கடினம் என சுட்டிக்காட்டிய தலைவர், இலங்கை தொலைக்காட்சி கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை வானொலி கூட்டுத்தாபனத்தை பொது நிறுவனமாக மாற்றுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அதன் பிரகாரம், மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு குழுவொன்றை நியமிக்க அமைச்சர்கள் சபை தீர்மானித்துள்ளது.

அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களுக்கு அரச ஊடகங்கள் போதிய விளம்பரங்களை வழங்குவதில்லை என குழுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அபிவிருத்தி செய்யப்பட வேண்டிய கட்டிடங்கள், வீதிகள், பாலங்கள் போன்ற பல்வேறு விடயங்களினால் பாதிக்கப்படும் பொதுமக்களின் சிரமங்களை பொது ஊடகங்கள் ஒளிபரப்புவதுடன், பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள வசதிகள் குறித்தும் மக்களுக்கு தெரிவிக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

இங்கு, சமூக கலாச்சாரம் மற்றும் தனிப்பட்ட சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கும் ஊடகங்களின் பிரச்சார நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவதற்கு எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தயாரித்து குழுவிடம் வழங்குமாறு இலங்கை பத்திரிகையாளர் சபைக்கு தலைவர் பணிப்புரை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: