தொடரும் கனமழையால் வடக்கின் அநேக மாவட்டங்களில் பெரும்போக நெற் செய்கை பெரிதும் பாதிப்பு என விவசாயிகள் கவலை!

Saturday, December 5th, 2020

வங்கக்கடலில் நிலை கொண்ட தாழமுக்கம் காரணமாக காற்றுடன் கூடிய மழை பெய்து வந்த நிலையில் வடக்கின் அநேக மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வந்த பெரும்போக நெற் செய்கை பெரிதும் பாதிப்படைந்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

தற்போது பெய்துவரும் கடும் மழை காரணமாக 90 வீதமான பெரும் போக நெற் செய்கை நீரில் மூழ்கியுள்ளது. தொடர்ச்சியாக வெள்ளப் பாதிப்பு ஏற்படும் நிலையில் முற்றாக விவசாய செய்கை அழிவடையும் நிலை ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் தற்போது வரை சுமார் 23 ஆயிரத்து 953.5 ஏக்கர் பெரும்போக நெற் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் டுபுரெவிடு புயல் காரணமாக ஏற்பட்ட கடும் மழையினை தொடர்ந்து விவசாய செய்கை நீரில் மூழ்கியுள்ளது.

பெரும் போக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ள விவசாய நிலங்களில் சுமார் ஒரு அடிக்கு மேலாக வெள்ள நீர் தேங்கியுள்ளது. தொடர்ந்தும் குறித்த நிலை காணப்பட்டால் பெரும் போக விவசாயம் முழுவதும் பாதிப்படையும் என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் 1,061 ஏக்கர் விவசாய செய்கையும், நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் 4826.5 ஏக்கர் விவசாய செய்கையும், முசலி பிரதேச செயலாளர் பிரிவில் 3,274 ஏக்கர் விவசாய செய்கையும், மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் 11,925 ஏக்கர் விவசாய செய்கையும், மடு பிரதேசச் செயலாளர் பிரிவில் 2,867 ஏக்கர் விவசாய செய்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதே வேளை மடு பிரதேசச் செயலாளர் பிரிவில் சின்ன வலயன் கட்டு சிறிய நீர்பாசனக் குளம் உடைப்பெடுத்துள்ளதோடு, முருங்கன் , நானாட்டான் இரணை இழுப்பைக்குளம் , மறிச்சுக்கட்டி ,பாலம்பிட்டி சிறிய நீர்பாசனக் குளங்கள் வான் பாய்ந்து வருவதாகவும் தெரிய வருகின்றது.

Related posts: