தேர்தலுக்கு நிதி வழங்கக்கோரி தாக்கல் செய்த மனுவை பரிசீலிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!
Monday, February 27th, 2023உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தல்களை நடத்துவதற்காக 2023ம் ஆண்டுக்கான பாதீட்டின் மூலம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை விடுவிக்காமைக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தாக்கல் செய்த மனுவை பரிசீலிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதன்படி எதிர்வரும் மார்ச் 3 ஆம் திகதியன்று குறித்த மனு பரிசீலனைக்கு அழைக்கப்படவுள்ளது.
மனுவை எதிர்வரும் மார்ச் மாதம் 9 ஆம் திகதிக்கு முன்னர் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளுமாறு மனுதாரர் தரப்பு சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் ஜயசூரிய விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த மனு நீதியரசர்கள்-எஸ்.துரைராஜா, யசந்த கோதாகொட மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகிய மூவரடங்கிய உயர்நீதிமன்ற அமர்வு முன்னிலையில் இன்று காலை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
நிதியமைச்சின் செயலாளர், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அடங்கிய குழுவினர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
சம்பந்தப்பட்ட தீர்ப்பின் மூலம் பிரதிவாதிகள் பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளனர் என்று அறிவிக்கும் நீதிமன்ற உத்தரவு, மனுவின் மூலம் கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|