தேசிய வளங்களை விற்று வாழ வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு கிடையாது – இராஜாங்க அமைச்சர் உறுதி!

Tuesday, January 26th, 2021

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்திய நிறுவனத்துக்கு வழங்குவதில் எவ்வித மாற்றமும் கிடையாது என கிராம வீதி அபிவிருத்தி அத்தியாவசிய சேவைகள் தொடர்பான இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா தெரிவித்துள்ளார்.

அத்துடன் 35 வருட காலத்துக்கு வர்த்தக நடவடிக்கைகளுக்காக கிழக்கு முனையத்தை ஒப்பந்த அடிப்படையில் வழங்குவதால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது எனவும் தேசிய வளங்களை விற்று வாழ வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு கிடையாது என்பதை உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளோம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கெரவலபிடிய பகுதியில் நடைபெற்ற பொதுஜன பெரமுனவின் இளைஞர் அணி செயற்குழு கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்.

தேசிய வளங்களை விற்று வாழ மாட்டோம் என்பதை அரசாங்கம் உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது. முதலீடுகளை ஊக்குவிப்பதற்காகவே கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் இந்திய நிறுவனத்துக்கு வியாபார நடவடிக்கைகளுக்காக வழங்கப்படுகிறது.

இந்தியா மாத்திரமல்ல சீனா, ஜப்பான், அமெரிக்கா என அனைத்து நாடுகளும் இலங்கையில் முதலீடுகளை முன்னெடுக்க முடியும். அதற்கான சூழல் தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் வெளிநாடுகளின் முதலீடுகள் அதிகரிக்கும் போது இளைஞர் யுவதிகளுக்கு தொழில்வாய்ப்புக்கள் வழங்கப்படும். ஆகையால் கிழக்கு முனையம் இந்திய நிறுவனத்துக்கு வியாபார நடவடிக்கைகளுக்காக வழங்கப்படும். இந்திய இலங்கையின் அயல்நாடு என்பதால் அந்நாட்டை பகைத்துக் கொள்ள முடியாது.

மேலும் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் இலங்கையின் தேசிய பொருளாதாரம் ஒப்பீட்டளவில் பாதிக்கப்பட்டுள்ளது. நெருக்கடிகளை வெற்றி கொண்டு பொருளாதார மட்டத்தில் முன்னேற்றமடைவதற்கான நடவடிக்கைகளை செயற்படுத்த வேண்டும்.இதன் முதற்கட்டமாகவே விமான நிலையங்கள் தற்போது திறப்பட்டுள்ளன.

அதேபொல கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்திய நிறுவனத்துக்கு வழங்குவதால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. முனையத்தின் 51 சதவீதமான உரிமம் துறைமுக அதிகார சபையிடமே உள்ளது. அரசாங்கத்தின் தீர்மானத்தை தற்போது எதிர்க்கும் எதிர்க்கட்சியினர் அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்கும் போது அமைதியாக இருந்தார்கள். தற்போது தேசப்பற்றுள்ளவர்கள் போல பேசுகிறார்கள்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவின் ஆட்சி காலத்தில் 5 பிரதான மாபெரும் அபிவிருத்திகள் செயற்படுத்தப்பட்டன.

கடந்த அரசாங்கம் அம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 வருட காலத்துக்கு சீன நிறுவனத்துக்கு வழங்கியது. இதனால் இலங்கைக்கு பெருமளவான இலாபம் கிடைக்கப் பெறவில்லை. ஆனால் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் இந்திய நிறுவனத்துக்கு 35வருட காலத்துக்கு வர்த்தக நடவடிக்கைகளுக்கு மாத்திரம் வழங்கப்படுகிறது. இதனால் பெருமளவில் வருமானம் கிடைக்கப்பெறும் என்றுமு; அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts: