திருமலையில் தமிழர் விகிதாசாரத்தைப் பாதுகாத்தது ஈ.பி.டி.பின் அரசியல் சாணக்கியமாகும் – ஊடகப் பேச்சாளர் ஸ்டாலின் உரை.
Thursday, December 1st, 2016திருகோணமலையில் தமிழர் விகிதாசாரத்தைப் பாதுகாத்ததில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பங்களிப்பை யாரும் மறுக்க முடியாது. ஆனந்தபுரி, நித்தியபுரி,தேவா நகர், அலஸ்தோட்டம்,வரோதயநகர்,லிங்க நகர்,பாலையூற்று பூம்புகார் கிழக்கு, புதுக்குடியிருப்பு ஆகிய எட்டு தமிழ்க் குடியேற்றத் திட்டங்களை ஏற்படுத்தி நாம் திருகோணமலையில் செய்த மக்கள் நலப்பணிகளைப்போல் வேறு எந்தத் தரப்பும் திருகோணமலையில் தமிழ் மக்களின் நலன்கள் தொடர்பாகவும்,விகிதாசாரத்தைப் பாதுகாக்கும் வகையிலும் எதையும் செய்யவில்லை என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் ஸ்டாலின் தெரிவித்தார்.
கடந்த 30.11.2016ஆம் திகதி திருகோணமலையில் அமைந்துள்ள ஈ.பி.டி.பி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற கட்சியின் முன்னாள் உறுப்பினர்கள்,அபிமானிகள்,ஆதரவாளர்கள் ஆகியோருடனான சந்திப்பின்போதே தோழர் ஸ்டாலின் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கும்போது,நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியாகவும், வடக்கு கிழக்கு மாகாணசபைகளில் ஆளுந்தரப்பாகவும் போலித் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருக்கின்றது. ஆனாலும் அவர்களுக்கு வாக்களித்த தமிழ் மக்களுக்கு இவர்களால் எவ்வித நன்மைகளும் இதுவரை கிடைக்கவில்லை. திருகோணமலையில் நில அபகரிப்புத் தொடர்கின்றது,அரச உத்தியோகங்களில் தமிழ் மக்கள் புறக்கணிக்கப்படுகின்ற சம்பவங்கள் நடைபெறுவதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுகின்றது. 20 வருடங்களுக்கும் மேலாககுடியேற்றங்களில் வாழும் தமிழ் மக்களுக்கு காணி உறுதிகளைப் பெற்றுக் கொடுக்கவேண்டியுள்ளது. இவை தவிரவும் வேலை வாய்ப்புக்கள் மற்றும் நாளாந்தப் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டியுள்ளது. இவை தொடர்பாக அக்கறை கொள்ளாமல்,திருகோணமலையில் தமிழ் மக்களின் வாக்குகளை அபகரித்த தமிழ்த் தரப்பினர் இந்த மாவட்டத்திற்கு விருந்தாளிகள் போலவே வந்துபோகின்றனர்.
இந்த நிலைமையை மாற்ற வேண்டும்,அரசியல் அதிகாரமானது மக்களுக்கு பயனுள்ளவகையில் பிரயோகிக்கப்பட வேண்டும். அவ்வாறில்லாமல் கௌரவப் பிரதிநிதிகளாக எவரையும் மக்கள் தெரிவு செய்வதில் அர்த்தமில்லை.
எமது தலைவர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் 15 வருடங்கள் ஆயுத வழிமுறைப்போராட்டத்தையும், 21 வருடங்கள் ஜனநாயக அரசியல் வழிமுறைப் போராட்டங்களையும் முன்னெடுத்த அனுபவமுடையவர் அவருடைய வழிகாட்டலுடனும்,வழித்துணையுடனும் எமது மக்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வுகளைப் பெற்றுக் கொள்ள தமிழ் மக்கள் தமது ஆதரவை எமக்கு வழங்க வேண்டும். சமூக அக்கறையும்,இனப்பற்றும் இருக்கும் ஒவ்வொருவரும் ஈ.பி.டி.பியுடன் இணைந்து மக்கள் சேவை செய்ய முன்வர வேண்டும் என்றும் ஈ.பி.டி.பியின் ஊடகச் செயலாளர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.
இக்கூட்டத்தில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரெத்தினம் அவர்கள்,கட்சியின் நிர்வாகக் கட்டமைப்புக்களை திருகோணமலையில் வட்டார ரீதியாக ஏற்படுத்துவது தொடர்பாகவும், அதில் உறுதியானவர்களையும், கட்சியின் விசுவாசிகளையும் உள்ளீர்ப்பது தொடர்பாகவும் விளக்கமளித்தார்.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் திருகோணமலை மாவட்ட இணைப்பாளர் தோழர் புஸ்பராஜா தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் திருமலை மாவட்ட நிர்வாகத் தோழர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
Related posts:
|
|