திருக்கேதீஸ்வர ஆலய மகா சிவராத்திரி நிகழ்வுக்கான அனைத்துஏற்பாடுகளும் பூர்த்தி – மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமெல் அறிவிப்பு!

Saturday, February 19th, 2022

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் மகா சிவராத்திரி நிகழ்வுகளுக்காக நாட்டின் சகல பாகங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தரவுள்ள நிலையில் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு சகல ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமெல் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 1 ஆம் திகதி மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் மகா சிவராத்திரி நிகழ்வுகள் இடம்பெறவுள்ள நிலையில் முன்ஆயத்த நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயும் அவசர கலந்துரையாடல் மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது.

திருக்கேதீஸ்வர ஆலய பரிபாலகர் சபை, திணைக்களத் தலைவர்கள் என பலரும் குறித்த கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டி மெல், “கடந்த வருடத்தை விட இவ்வருடம் நாட்டின் சகல பாகங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தர அனுமதி வழங்கி உள்ளோம்.

வருகை தருகின்ற பக்தர்கள் முழுமையாக தடுப்பூசியை பெற்றுக் கொண்டவர்களாக இருக்க வேண்டும். தடுப்பூசியை பெற்றுக்கொண்டமைக்கான ஆதாரமாக தடுப்பூசியை அட்டையை அல்லது தடுப்பூசி அட்டையினை கையடக்கத் தொலைபேசியில் புகைப்படம் எடுத்து கொண்டு வர வேண்டும்.

கடமையில் ஈடுபடுத்தப்படும் பொதுசுகாதார பரிசோதகர்கள் நுழைவாயிலில் பரிசீலனை செய்வார்கள். இதன்போது காண்பிக்க வேண்டும். திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு வருகை தருகின்ற சகல பக்தர்களும் சுகாதார விதிமுறைகளை உரிய முறையில் கடைபிடிக்க வேண்டும்.

அதற்கான சகல ஒழுங்குகளும் சுகாதார திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. உணவு வழங்குவதற்கான வியாபார நிலையங்கள் அமைக்கப்படும். ஆனால் உணவை பெற்றுக் கொண்டு சென்று உண்ண வேண்டும்.

உணவகங்களில் இருந்து சாப்பிட முடியாது. பாலாவி தீர்த்தத்தில் இறங்கி குளிப்பதற்கு சுகாதார துறையினரால் அனுமதி வழங்கப்படவில்லை.

ஆனால் பக்தர்கள் பாலாவி தீத்தத்தை பெற்றுக் கொள்வதற்கு அங்கு கடமையில் இருக்கும் தொண்டர்கள் நீரை அள்ளி பக்தர்களுக்கு கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேநேரம் ஆலயத்திற்கு வர முடியாத பக்தர்களுக்காக தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பு செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

அத்துடன் தனியார் மற்றும் அரச வாகனங்களின் போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக தனித்தனி இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் ஏனைய அவசிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: