கல்விச் செயற்பாட்டை மேற்கொள்ளும் வகையில் பல்கலைக்கழக மாணவர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி – உபவேந்தர்கள் கல்வி அமைச்சரிடம் கோரிக்கை!

Wednesday, June 30th, 2021

நாட்டில் அதிகரித்துச் செல்லும் கொரோனா தொற்றை அடுத்து கல்விச் செயற்பாட்டை மேற்கொள்ளும் வகையில் நாட்டிலுள்ள பல்கலைக்கழக மாணவர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசியை வழங்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக உபவேந்தர்கள், கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸிடம் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

கல்வி அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பல்கலைக்கழக கல்விசார் மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கும் கொரோனா தடுப்பூசியை பெற்றுக் கொடுக்க வேண்டும் என உபவேந்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சுகாதார பரிந்துரைகளுக்கு அமைய விரைவாக பல்கலைக்கழக கல்வியை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மாணவர்களுக்கு தற்போது முன்னெடுக்கப்படும் ஒழுங்குபடுத்தப்பட்ட கற்பித்தல் செயற்பாடுகளில் காணப்படும் சிக்கல்கள் மற்றும் எதிர்காலத்தில் நடத்தப்படவுள்ள பரீட்சைகளை சுகாதார முறையில் முன்னெடுப்பது உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: