திடீர் மின்தடை: பலமணி நேரம் முடங்கியது இலங்கை! மின்சார சபை தலைவர் இராஜினாமா?

Monday, March 14th, 2016

நேற்று பிற்பகல் 2.40 மணியளவில் நாடு முழுவதும் துண்டிக்கப்பட்ட மின் விநியோகம் எட்டு மணிநேரத்தின் பின்னர் மீண்டும் வழமைக்கு திரும்பியது.

பியகம உப மின் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட உயர் மின் அழுத்தத்தின் காரணமாக ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறின் விளைவாகவே இலங்கை முழுவதும் இருளில் மூழ்கியதாக இலங்கை மின்சார சபை தெரிவித்தது.

எட்டு மணிநேர மின் விநியோகம் தடைப்பட்டமையினால் நாட்டின் அனைத்து துறைகளும் ஸ்தம்பிதம் அடைந்திருந்தன. குறிப்பாக வைத்தியசாலை சேவைகள் முழுமையாக பாதிப்படைந்திருந்தன.

மேலும் வீதி சமிக்ஞை விளக்குகள் இயங்கவில் லை. இதன்காரணமாக பிரதான நகரங்களில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டிருந்தது. அதேபோன்று ரயில் சேவைகளும் பெரிதும் பாதிக்கப்பட்டன. அதுமாத்திரமின்றி பெற்றோல் நிலையங்களும் ஹோட்டல்களும் மாலை பொழுதிலேயே மூடப்பட்டன. இதன் காரணமாக மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் நாடுபூராகவும் திடீரென மின்விநியோகம் தடைப்பட்டது. இதனைத் தொடர்ந்து சில இடங்களில் மாலை 5 மணியளவில் விநியோகம் வழமைக்கு திரும்பியது.

இருப்பினும் பெரும்பாலான இடங்களில் இரவு 7 மணிக்கு வழமைக்கு திரும்பினாலும் மீளவும் நாடு முழுவதிலும் மின் விநியோகம் தடைப்பட்டது. இதனையடுத்து இரவு 9 மணி தொடக்கம் 10 மணி வரையிலான காலப்பகுதிகளில் பெரும்பாலான பிரதேசங்களில் மின் விநியோகம் வழமைக்கு திரும்பியிருந்தது.

நேற்றைய தினம் 10.30 மணியளவில் பெரும்பாலான இடங்களில் நிலைமை வழமைக்கு திரும்பியது. இதன்படி கண்டி,கொழும்பு மற்றும் நுவரெலியா ஆகிய பிரதேசங்களில் 10 மணிக்கும், யாழ்ப்பாணம் , வவுனியா ஆகிய பகுதிகளில் 10.30 மணிக்கும், திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் 10.10 மணியளவிலும் மின் விநியோகம் வழமைக்கு திரும்பியது.

இது தொடர்பில் மின்வலு மற்றும் மீள்புத்தாக்க அமைச்சின் செயலாளர் தெரிவித்ததாவது – பியகம பிரதேசத்திலுள்ள மின்நிலையத்தில் ஏற்பட்ட கோளாறின் காரணமாக மின் துண்டிப்பு ஏற்பட்டது. எனினும் மூன்று நாட்களுக்கு மின்விநியோகத்தில் சிக்கல் நிலைமை ஏற்படும். அத்துடன் நுரைசோலை அனல் மின்நிலையத்தின் செயற்பாடுகள் மூன்று நாட்களுக்கு சிக்கலாக காணப்படும் என்றார்.

மின்விநியோக தடைகாரணமாக வீதி சமிக்ஞை விளக்குகள் துண்டிக்கப்பட்டமையினால் கொழும்பு , கண்டி உள்ளிட்ட பிரதான நகரங்களில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டது. மேலும் ரயில் சேவைகளும் ஸ்தம்பிதம் அடைந்து காணப்பட்டன. இதன்காரணமாக பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர்.

இதேவேளை அநுராதபுரம், பொலன்னறுவை, குருநாகல், பதுளை, நுவரெலியா உள்ளிட்ட பல்வேறு இடங்களின் பிரதான வைத்தியசாலைகளில் மின்விநியோகம் துண்டிக்கப்பட்டமையினால் நோயாளிகளும் பெரும் அசௌகரியங்கள் எதிர்கொண்டனர்.

நாடுபூராகவும் ஆறுமாதங்களில் இதுவரை மூன்று தடவைகள் மின்விநியோகம் துண்டிக்கப்பட்டன. இந்நிலையில் நேற்று பாரிய மின்துண்டிப்பு ஏற்பட்டதனை அடுத்து இலங்கை மின்சார சபையின் தலைவர் அநுர விஜயபால தனது பதவியை இராஜினாமா செய்யப்போவதாக அறிவித்துள்ளார்.

இதன்படி இன்றைய தினம் அதற்கான இராஜினாமா கடிதத்தை அமைச்சரிடம் கையளிக்கவுள்ளார். மின் பொறியியல் துறையில் 20 வருட அனுபவத்தை பெற்ற இவர் , 2011 ஆம் ஆண்டு மின்சார சபையின் உபதலைவர் பதவியிலிருந்தமை குறிப்பிடதக்கது.

கடந்த ஆறு மாதங்களில் இதுவரை மூன்று தடவைகள் மின்விநியோகம் துண்டிப்பு குறித்து இன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய சந்திக்கவுள்ளார். மேலும் இன்று காலை 10 மணிக்கு அமைச்சில் விசேட சந்திப்பொன்றும் நடைபெறவுள்ளது. தொடர் மின் துண்டிப்பு தொடர்பில் ஆராய்வதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அண்மையில் ஐவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: