தாய்நாட்டிற்கு திரும்பிய பின்னர் ஓய்வூதியத்தை பெற்றுக்கொள்ள வாய்ப்பளிக்கவும் – இத்தாலியில் வாழும் இலங்கையர்கள் பிரதமர் மஹிந்தவிடம் கோரிக்கை!

Wednesday, September 15th, 2021

தாய்நாட்டிற்கு திரும்பிய பின்னரும் ஓய்வூதியத்தை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பை பெற்றுத் தருமாறு இத்தாலியில் வாழும் இலங்கை மக்கள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இத்தாலியில் வாழும் இலங்கை மக்களுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பொன்று போலோக்னா நகரில் நேற்றையதினம் இடம்பெற்றது.

இதில் இத்தாலியின் பல்வேறு நகரங்களை பிரதிநிதித்துவப்படுத்தி வருகைத்தந்திருந்த இலங்கை பிரதிநிதிகள் போலோக்னா ஹோட்டலில் பிரதமரை சந்தித்து பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடினர்.

அத்துடன் கொரோனா தொற்று நிலைமைக்கு மத்தியில் இவ்வாறு இத்தாலிக்கு விஜயம் செய்து இத்தாலியில் வாழும் இலங்கை மக்களை சந்திப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கியமை குறித்து இலங்கை பிரதிநிதிகள் பிரதமருக்கு நன்றி தெரிவித்திருந்தனர்.

அதேநேரம் இன்றைய பிரதமர் ஜனாதிபதியாகவிருந்த காலப்பகுதியில் இத்தாலி மற்றும் இலங்கை இடையே ஏற்படுத்தப்பட்ட இருதரப்பு நட்பு காரணமாக இதுவரை இத்தாலியில் வாழும் இலங்கை மக்களுக்கு கிடைக்கும் வசதிகள் தொடர்பிலும் வருகை தந்திருந்த பிரதிநிதிகள் நினைவுகூர்ந்திருந்தனர்.

மிலான் நகரில் இலங்கை கொன்சியூலர் அலுவலகம் அமைப்பதற்கு அப்போதைய ஜனாதிபதியாகவிருந்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மேற்கொண்ட தொலைநோக்கு செயற்பாடு காரணமாக பிரச்சினைகளை தீர்த்துக்கொள்வதில் இலங்கையர்கள் பலரது காலமும் பணமும் மிச்சப்படுவதாக இதன்போது தெரிவிக்கப்பட்டது.

அந்தவகையில் எதிர்காலத்தில் மீண்டும் இலங்கைக்கு திரும்பும் எதிர்பார்ப்புடன் காணப்படும் இத்தாலியிலுள்ள இலங்கை மக்களுக்கு இருபது ஆண்டு சேவை காலத்தின் பின்னர் அந்நாட்டில் வழங்கப்படும் ஓய்வூதியத்தை தாய்நாட்டிற்கு திரும்பிய பின்னரும் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பை பெற்றுத்தருமாறு அங்கு வருகைத்தந்திருந்த பிரதிநிதிகள் பிரதமரிடம் கேட்டுக்கொண்டனர்.

குறித்த முன்மொழிவு தொடர்பில் இத்தாலி அரசாங்கத்துடன் கலந்துரையாடுமாறு பிரதமர், வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ்க்கு அச்சந்தர்ப்பத்திலேயே அறிவுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: