தனியார் கல்வி நிறுவனங்கள் தொடர்பில் அதிகாரசபை – பிரதி அமைச்சர் அஜித்.பி.பெரேரா!

Wednesday, May 17th, 2017

தனியார் கல்வி நிறுவனங்களின் தரத்தை தீர்மானிப்பதற்காக தர நிர்ணய அதிகாரசபையொன்று நிறுவப்படவிருப்பதாக மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி பிரதி அமைச்சர் அஜித்.பி.பெரேரா தெரிவித்துள்ளார்

தர நிர்ணய அதிகாரசபை சுயமாக இயங்குமென சுட்டிக்காட்டிய பிரதி அமைச்சர் தனியார் நிறுவனங்களின் தரத்தை ஆராய்வதற்கும் முறைப்படி இயங்காத நிறுவனங்கள் தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்வதற்கும்  சபைக்கு அதிகாரம் வழங்கப்படும் என்றும் கூறினார்.

தனியார் மருத்துவக் கல்லூரிகள் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைபாடு குறித்து  விளக்கமளிக்கும் செய்தியாளர் மாநாட்டில் பிரதி அமைச்சர் அஜித்.பி.பெரேரா இந்த விடயங்களை தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இந்த மாநாடு நடைபெற்றது.  ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த பிரதி அமைச்சர் அஜித்.பி.பெரேரா இதற்கான நகல் சட்டம் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் கூறினார்.

சைற்றம் கல்லூரியின் தரம் மற்றும் தனியார் மருத்துவ துறை  தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சையையடுத்து அரசாங்கம் தனியார் உயர் கல்வி தொடர்பிலான தனது கொள்கையை மேலும் உறுதி செய்துள்ளது.  கொள்கை மட்டத்தில் எவ்வாறான தீர்மானத்தை முன்னெடுப்பது என்பது தொடர்பில் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் அனைத்து பத்திரிகைகளிலும் இது தொடர்பாக அறிக்கை வெளியிடப்பட்டது. இதன் ஊடாக இவ்விடயத்தில் அனைவருக்கும் தெளிவு கிடைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இதுகுறித்த அனைத்து சிபாரிசுகளையும் நடைமுறைப்படுத்தும் வரை சைற்றம் கல்லூரிக்கு புதிய மாணவர்கள் அனுமதிக்கப்படுவது தடைசெய்யப்பட்டுள்ளது. சைற்றம் கல்லூரியிலிருந்து வெளியேறும் மாணவர்களை முறையான வைத்தியர்களாக தெரிவு செய்வதற்கென அரசாங்க மருத்துவக் கவுன்ஸில் விசேட பரீட்சை நடத்தும் என்றும் தெரிவித்தார்.

பிரதி அமைச்சர் எரான் விக்கிரமரட்ன இங்கு கருத்து தெரிவிக்கையில்,  தகுதியான அனைத்து மாணவர்களுக்கும் பொருத்தமான கல்வியை வழங்கக்கூடிய தகுதி அரசாங்கத்திடம் இல்லாதபட்சத்தில் மாணவர்கள்  கல்வியை தொடர்வதற்கான அவர்களது உரிமையை அரசாங்கம் உறுதி வேண்டும். தனியார் பல்கலைக்கழகங்கள் பங்குச் சந்தைகளுடன் இணைக்கப்படுவதற்கு முன்னர் அவற்றின் தரம் மற்றும் கொள்கை உள்ளடங்கலான புதிய சட்டம் வரையப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

Related posts: