டிஜிட்டல் மயமாகிறது இலங்கை – அமைச்சர் பீரிஸ் மலேசியாவுடன் கலந்துரையாடல்!

Sunday, October 17th, 2021

இலங்கை – மலேசியா ஆகிய இரு நாடுகளுக்கும் நன்மைகளைத் தரக்கூடிய துறைகளில் ஒருங்கிணைப்புக்களைக் கட்டியெழுப்பவேண்டிய தேவையை வலியுறுத்திய வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல் பீரிஸ், இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான இருதரப்பு கூட்டுப்பங்காண்மையையும் கொழும்பிலுள்ள மலேசிய உயர்ஸ்தானிகர் டான் யாங் தாயிடம் அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளார்.

கொழும்பிலுள்ள மலேசிய உயர்ஸ்தானிகர் டான் யாங் தாய், வெளிநாட்டமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸை மரியாதை நிமித்தமாக அண்மையில் வெளிநாட்டமைச்சில் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார். இதன்போதே அமைச்சர் பீரிஸ் இவ்வாறு சுட்டிக்காட்டியிருந்தார்.

மேலும் இலங்கைக்கும் மலேசியாவிற்கும் இடையிலான நெருங்கிய மற்றும் நட்புடனான இருதரப்பு உறவுகளை நினைவுகூர்ந்த வெளிநாட்டமைச்சரும் உயர்ஸ்தானிகரும், கொவிட்-19 இற்குப் பிந்திய காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான கூட்டுறவினை மேலும் விரிவாக்குவதற்கான வழிவகைகள் தொடர்பிலும் கலந்தாலோசித்தனர்

குறிப்பாக டிஜிட்டல் மயமாக்கல் துறையில் மலேசியாவின் பாரிய முன்னேற்றம் குறித்து வெகுவாகப் பாராட்டுக்களை தேரிவித்த அமைச்சர் பீரிஸ் இத்துறையின் மீதான மலேசியாவின் அனுபவங்களை அறிந்துகொள்ளும் இலங்கையின் விருப்பத்தை வெளிப்படுத்தியதுடன் இலங்கையின் தேவைகளுக்கேற்ப அதிலுள்ள சில அம்சங்களைத் தழுவிக்கொள்ளவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

அரச துறையில் நிருவாகம், நீதிமன்ற வழக்குகள், கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு பிரதான துறைகளில் வேகமான முன்னேற்றத்தை அடைவதற்குரிய ஒரு பகுதியாக டிஜிட்டல் மயமாக்கலழன அவசியம் குறித்தும் அமைச்சர் பீரிஸ் இக்கலந்துரையாடலின்போது இனங்காட்டியிருந்தார்.

அத்துடன் மலேசிய பல்கலைக்கழகங்கள் தமது மாணவர்கள் வெளிநாட்டுக்குப் புலம்பெயராமலேயே உயர்கல்வியைத் தொடரும் வண்ணம் புகழ்பெற்ற வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுடன் ஒருங்கிணைந்து பல்வேறு கற்கை நெறிகளை வழங்கும் கல்வி முறையை பாராட்டிய அமைச்சர் பீரிஸ், இலங்கையின் உயர்கல்வி மற்றும் தொழில்நுட்ப கல்வியில் போதுமான உட்கட்டுமானங்கள் இல்லாமையைக் கோடிட்டுக் காட்டியதுடன் தொழிற்பயிற்சியின் விரிவாக்கம், இரு நாடுகளுக்கும் இடையிலான கூட்டுறவில் மேம்பாட்டை எட்டக்கூடிய துறையாக அமைய வேண்டும் எனவும் அடையாளம் காட்டியிருந்தார்.

Related posts: