உள்ளூராட்சி மன்ற நிர்வாகத் திறன்களை மேம்படுத்துவது குறித்து ஆசி உயர்ஸ்தானிகருடன் ஆளுநர் கலந்துரையாடல்!
Wednesday, May 13th, 2026
…..
“வளர்ச்சிக்கான நிர்வாகம்” என்ற திட்டத்தின் ஊடாக, வட மாகாண உள்ளூராட்சி மன்றங்களின் நிர்வாகத் திறன்களை மேம்படுத்தும் நோக்கில்
அவுஸ்திரேலிய அரசாங்கம் சுமார் 4 மில்லியன் டொலர்களை வழங்கியுள்ள நிலையில் அத்திட்டம் வெற்றிபெற
தொடர்ச்சியான ஒத்துழைப்புகளை வழங்கவுள்கதாக அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.
வட மாகாணத்தின் விவசாயம், கடற்றொழில், காணி உரிமை மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகருக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று இடம்பெற்றது. இதன்போது இவ்வாறு கூறிய ஆசி உயர்ஸ்தானிகர்,
ஐக்கிய நாடுகள் சபையின் அனுசரணையுடன் காணிப் பிரச்சினை தொடர்பான விவகாரங்களுக்குத் தீர்வு காண்பதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள புதிய செயற்றிட்டம் தொடர்பிலும் வினவி அறிந்துகொண்டார்.
இதேவேளை பொதுமக்களுக்குத் தேவையான அரச சேவைகளை ஒரே இடத்தில் பெற்றுக்கொள்ளக்கூடிய ‘ஒற்றைச்சாள’ முறையிலான சமூகப் பராமரிப்பு மையங்களை உருவாக்குதல் மற்றும் முதலீட்டாளர்களுக்கான சேவைகளை எளிமைப்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்தும் இச்சந்திப்பில் ஆலோசிக்கப்பட்டது.
வட மாகாணத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் மாவட்டச் செயலாளராக நீண்டகாலம் சேவையாற்றிய ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் நிர்வாக அனுபவங்களை அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் இதன்போது வெகுவாகப் பாராட்டினார். ‘வடக்கின் அடிமட்டப் பிரச்சினைகளை உங்களை விடச் சிறப்பாக வேறு எவராலும் புரிந்துகொள்ள முடியாது’ என அவர் ஆளுநரிடம் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் இந்த நேர்மறையான அணுகுமுறைகளுக்கும், வட மாகாணத்தின் அபிவிருத்திக்காக அவர்கள் வழங்கி வரும் தொடர்ச்சியான ஒத்துழைப்புகளுக்கும் கௌரவ ஆளுநர் அவர்கள் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்தார்.
இச்சந்திப்பில் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயத்தின் உயர் அதிகாரிகள், வடக்கு மாகாண ஆளுநரின் ஊடகச் செயலாளர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
Related posts:
|
|
|


