ஜனாதிபதியின் பதவிக்காலம் மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்கப்படாது – அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவிப்பு!
Tuesday, January 25th, 2022ஜனாதிபதி அல்லது நாடாளுமன்றத்தின் பதவிக்காலத்தை மேலும் இரண்டு வருடங்கள் நீடிக்க சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆளும் கட்சிக்குள் கலந்துரையாடல் இடம்பெறவில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்று காரணமாக இரண்டு வருடங்கள் கடந்துள்ளமையினால் பதவிக்காலத்தை மேலும் இரண்டு வருடங்கள் நீடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஆகவே எஞ்சிய மூன்று வருடங்களுக்குள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கொள்கை பிரகடனத்தில் அறிவிக்கப்பட்ட இலக்குகளை அடைய அரசாங்கம் முயற்சிக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் தரப்பில் சில குறைபாடுகள் காணப்படுகின்ற போதிலும், அந்தப் பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதற்கு அடுத்த மூன்று வருடங்கள் உள்ளதாக ஜீ.எல்.பீரிஸ் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை இந்த ஆண்டு தேர்தல் சீர்திருத்தங்கள் உட்பட அரசியலமைப்பு முன்மொழிவுகளை இறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றதாக ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|