ஜனாதிபதியிடம் தீர்வுகோரும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்!
Monday, September 19th, 2016
அரச வைத்தியர்களின் பிள்ளைகளை சேர்த்துக்கொள்வதில் ஏற்பட்டுள்ள பிரச்சினை தொடர்பிலும், அது தொடர்பாக கல்வியமைச்சில் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தின்போது வைத்தியர்களுக்கு ஏற்படுத்தப்பட்ட இடையூறுகள் மற்றும் அராஜகத்தன்மை தொடர்பிலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் சுகாதார அமைச்சரும் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பில் அச்சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
வெளிநாடுகளில் பணிபுரிந்துவிட்டு மீள இலங்கைக்கு வந்துள்ள வைத்தியர்களின் பிள்ளைகளுக்கு உரிய தேசிய பாடசாலைகளை வழங்கக்கோரி கடந்த வாரம் கல்வியமைச்சில் இரவு முழுவதும் தங்கியிருந்து ஆர்ப்பாட்டம் மேற்கொண்டிருந்தோம். இதன்போது கல்வியமைச்சில் உள்ள அதிகாரிகளினால் எமது வாகனங்களுக்கு சேதம் விளைவித்தும், உணவுப்பொருட்களை கொண்டு வர விடாமலும் பல இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டன.
எங்களது கோரிக்கைகளை கொஞ்சமும் பொருட்படுத்தாது ஏற்படுத்தப்பட்ட இவ்வாறான அராஜகத்தன்மையான தாக்குதல்கள் மிகவும் கண்டிக்கத்தக்கவையாகும்.
வளங்களை பிரபலமான பாடசாலைகளுக்கு மட்டும் வழங்கிவிட்டு கிராமப்புற பாடசாலைகளை புறக்கணித்தமைக்கு கல்வியமைச்சரும் அரசியல்வாதிகளுமே காரணமாவர்.
நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் அபிவிருத்தி செய்திருப்பார்களாயின் நாம் பிரபல பாடசாலைகளை நோக்கி சென்றிருக்க தேவையில்லை. அவ்வாறிருக்கும் போது தற்போது நாம் எமது பிள்ளைகளுக்கு பிரபல பாடசாலைகளை தேடுவதை கல்வியமைச்சர் எமக்கெதிராக ஊடகங்களினூடாக பூதாகரமாக காண்பிக்க முனைகின்றார்.
இந்நிலையில் பாடசாலைகளின் கல்வி உரிமை தொடர்பிலும் பிள்ளைகளின் இடமாற்றம் தொடர்பிலும் கருத்து தெரிவிக்கும் ஆசிரிய சங்கத் தலைவர் ஜோசப் ஸ்டாலினும் மௌனமாக இருப்பது வேடிக்கையாக உள்ளது. குறித்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் சுகாதார அமைச்சரும் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
Related posts:
|
|