சுற்றுலா வீசா வாயிலாக தொழிலுக்கு அனுப்புவது சட்டவிரோதமானது – வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவிப்பு!

Saturday, September 9th, 2023

சுற்றுலா வீசா வாயிலாக தொழிலுக்கு அனுப்புவது சட்டவிரோதமாகும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா வீசா வாயிலாக சர்வதேச நாடுகளுக்கு தொழில்வாய்ப்பிற்காக சென்று பிரச்சினைகளை எதிர்கொள்ளும் பட்சத்தில் எவ்வித பொறுப்பினையும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஏற்றுக்கொள்ளாது எனவும் அறிவித்துள்ளது.

அத்துடன் தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்கு செல்லும் இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்வது கட்டாயமாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் சுற்றுலா வீசா மூலம் ஓமானுக்கு சென்று சித்திரவதைகளை அனுபவித்து வந்த ஒருவர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் உதவியுடன் இலங்கைக்கு மீண்டும் அழைத்துவரப்பட்டுள்ளார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பாதிக்கப்பட்டவரின் மனைவியால் அளிக்கப்பட்ட முறைப்பாட்டினை தொடர்ந்து குறித்த நபர் நாட்டிற்கு அழைத்துவரப்பட்டு நீர்கொழும்பு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அத்துடன் குறித்த நபரை சுற்றுலா வீசா மூலம் தொழிலுக்கு அனுப்பிய மத்துகம பகுதியை சேர்ந்த ஒருவர் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: