காணாமல்போனோர் சங்கம் அமைத்து நியாயம் கேட்டவர்கள் நாங்களே–தோழர் விந்தன்!
Friday, April 7th, 2017தமது கோரிக்கைகளை முன்வைத்து மக்கள் தாமாகவே வீதிக்கு இறங்கிப் போராடுகின்ற சூழல் இன்று உருவாகியுள்ளது. எமது மக்களின் வாக்குகளை அபகரித்தவர்கள் மக்களின் நிலமீட்பு போராட்டத்திற்கு ஆதரவாக ஏன் தங்களது இணக்க அரசியல் வழிமுறையை பயன்படுத்த வில்லையென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சர்வதேச முக்கியஸ்தர் விந்தன் சுட்டிக்காட்டியுள்ளார்.
மருதங்கேணியில் நேற்றையதினம் (06) நடைபெற்ற கட்சியின் வட்டார செயற்பாட்டாளர்கள்; மத்தியில் உரையாற்றும்போதே இவ்வாறுதெரிவித்துள்ளார்.
இன்று வெகுஜனப் போராட்டங்கள் எமது மக்களினால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. உங்கள் பிரச்சினைகளை நாங்கள் தீர்த்துவைப்போம் எமக்கு வாக்களித்தால் மட்டும் போதும் என்று வாக்குறுதி வழங்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இணக்க அரசியல் அதிகாரத்தில் உட்கார்ந்திருக்கின்றார்கள்.
காணாமல் போன தமது உறவுகளுக்காகவும் இழந்த தமது நிலங்களை மீட்பதற்காகவும், நிரந்தர நியமனம் கேட்டு வேலையற்ற பட்டதாரிகளும் இன்று சுயமாகவே போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றார்கள்.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினராகிய நாம் 1994 ஆம் ஆண்டு 9 ஆசனங்களைக் கொண்டிருந்தபோது அன்றைய அரசு வலிவடக்கில் எமது மக்களின் காணிகளை சுவீகரிக்க எத்தனித்தது. அப்போதுநாம் நாடாளுமன்றத்தை பகிஸ்கரித்ததன் மூலம் காணி சுவிகரிப்பை தடுத்து நிறுத்தியிருந்தோம்.
1996 இல் காணாமல்போன எமது உறவுகளை கண்டுபிடிப்பதற்காக காணாமல் போனோர் பெற்றோர் பாதுகாவலர் சங்கம் அமைத்துமுதன் முதலில் போராட்டம் நடத்தியவர்கள் நாங்கள். காணாமல்போனோர் விடயத்தை வெளியுலகுக்கு தெரியப்படுத்தியவர்களும் நாங்களே.
ஆனாலும் காணாமல் போனோரை கண்டுபிடித்து தருவோம் என்று தேர்தல் வாக்குறுதி கொடுத்தவர்கள் இன்று என்ன செய்துகொண்டிருக்கின்றார்கள்? என்பது தொடர்பில் மக்களாகியநீங்கள் தெளிடையவேண்டும்.
கடந்த அரசுடன் மேற்கொண்டிருந்த இணக்க அரசியலூடாக கிடைக்கப் பெற்ற வாய்ப்புகளையும், சந்தர்ப்பங்களையும் உரியமுறையில் பயன்படுத்தி பல்லாயிரம் ஏக்கர் நிலங்களை மக்களின் கோரிக்கைக்கு அமைவாக மீட்டுக் கொடுத்திருக்கின்றோம் என்பதுடன்; சரணடைந்த முன்னாள் புலி உறுப்பினர்களையும் விடுவித்துக் காட்டியிருக்கின்றோம் என்றும் தெரிவித்தார்.
கட்சியின் பருத்தித்துறை பிரதேச நிர்வாகச் செயலாளர் விசிந்தனின் ஒழுங்கமைப்பில் கட்சியின் யாழ் மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்தசந்திப்பில் கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருணன் மற்றும் பிரதேச நிர்வாக உறுப்பினர்கள் எனபலரும் கலந்துகொண்டனர்.
Related posts:
|
|