நாடும் பொருளாதாரமும் பாதுகாக்கப்பட்டுள்ளமையையிட்டு ஒட்டுமொத்த இலங்கையர்களுக்கும் மகிழ்ச்சியடைய வேண்டும் – நிதி இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டு!

Monday, August 30th, 2021

தொற்று நோயிலிருந்து கடந்த ஒன்றரை வருடமாக மக்களைக் காப்பாற்றவும், பொருளாதாரத்தைக் காப்பாற்றவும் முடிந்துள்ளமையையிட்டு ஒட்டுமொத்த மக்களும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய நிலை தொடர்பில் தகவல் வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர் –

தொற்றுநோயைக் கட்டுப்படுத்தவும், மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் இவ்வளவு பணம் செலவழித்த போதிலும், அரசு ஊழியர்களின் சம்பளத்தைக் குறைக்கவோ அல்லது அவர்களுக்கான கொடுப்பனவுகளை குறைக்கவோ அரசாங்கம் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காததால், அரச ஊழியர்கள் மகிழ்ச்சியடைய வேண்டும்.

அதற்கும் அப்பால் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த சுகாதார அமைச்சும் பாரியளவான நிதியை செலவிட்டுள்ளது.

பிசிஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகள், பாதிக்கப்பட்ட மக்களுக்கு புதிய சிகிச்சை மையங்கள் கட்டுதல், இரண்டு வாரங்களுக்குத் தேவையான 10 ஆயிரம் ரூபா நிவாரணப் பொதிகளை வழங்குதல் உள்ளிட்ட செயற்பாடுகளுக்காகவும் அரசாங்கம் பாரிய அளவிலான நிதியை செலவிட்டுள்ளது.

கொரோனா தொற்றுநோயைக் கட்டுப்படுத்தவும் மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் இவ்வளவு பணம் செலவழித்துள்ள போதிலும், வெளிநாட்டு நிதி நிறுவனங்களுக்கு கடன் தவணைகளை செலுத்துவதன் மூலம் நாட்டின் பிற பொருளாதார செயற்பாடுகளையும் அரசாங்கம் சமநிலைப்படுத்தி வருகிறது.

மொத்தமாக தொற்றை கட்டுப்படுத்த 56 பில்லியனும் மக்களுக்கு நிவாரணத்தை பெற்றுக்கொடுக்க 70 ஆயிரம் கோடிக்கும் அதிகமான தொகையையும் அரசாங்கம் செலவு செய்துள்ளது.

முப்பது வருடப் போரின் போது கூட இதுபோன்ற பொருளாதார நெருக்கடியை நாடு எதிர்கொள்ளவில்லை.

அந்தவகையில் தொற்றுநோயிலிருந்து கடந்த ஒன்றரை வருடமாக மக்களைக் காப்பாற்றவும், பொருளாதாரத்தைக் காப்பாற்றவும் முடிந்துள்ளமையையிட்டு ஒட்டுமொத்த மக்களும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.

இதற்கு முன்னர் இந்த நாட்டை ஆட்சிசெய்த எந்தவொரு அரச தலைவரும் இவ்வாறு உலகளாவிய நெருக்கடியை எதிர்கொண்டிருக்கவில்லை. எனவே, பொதுமக்கள் சுகாதார வழிகாட்டல்களை தொடர்ந்து பின்பற்றி தொற்றிலிருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

00

Related posts: