சுற்றுச் சூழல் தூய்மையாக்கப்படும் வகையில் சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் – வேலணை பிரதேச சபை தவிசாளர் கருணாகரகுருமூர்த்தி!

Thursday, April 18th, 2019

வேலணை பிரதேசத்தின் சுற்றுச் சூழல் தூய்மையாக்கப்படும் வகையில் சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்பதுடன் திண்மக் கழிவுகளை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் முழுமையான பின்னர் அவற்றை வகைப் படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என வேலணை பிரதேச சபையின் தவிசாளர் கருணாகரகுருமூர்த்தி தெரிவித்துள்ளார்.

வேலணை பிரதேச சபையின் மாதாந்த கூட்டம் இன்றையதினம் சபையின் சபா மண்டபத்தில் தவிசாளர் கருணாகரகுருமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இதன்போது பிரதேசத்தின் ஆளுகைக்குள் திண்மக் கழிவுகளைக் கொட்டும் அராலிப் பகுதியிலுள்ள திடலில் அனைத்துவிதமான குப்பைகளும் ஒரே இடத்தில் கொட்டப்படுவதால் உக்கும் நிலை குப்பைகள் அல்லாத ஏனைய குப்பைகள்  குறித்த திடலையும் அதனை சூழவுள்ள ஏனைய பகுதிகளிலும் பரந்து காணப்படுவதால் அது சுற்றுச் சூழல் சார்ந்த பல அசௌகரியங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே சபையின் சுகாதாரப் பகுதியினரால் அகற்றப்பட்டுஅராலி பகுதியிலுள்ள திண்மக்கழிவுகள் கொட்டுமிடத்தில் கொட்டப்பட்டாலும் அவை உரிய முறையில் கையாளப்படாத நிலை காணப்படுவதால் அவற்றை வகைப்படுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என சபையின் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி உறுப்பினர் திருமதி அனுசியா ஜெயகாந்த் பிரேரணை ஒன்றை முன்வைத்தார்.

குறித்த பிரேரணை தொடர்பான கடுமையான விவாதம் சபையின் உறுப்பினர்களால் முன்னெடுக்கப்பட்டது. இந்நிலையில் அதற்கான தீர்மானம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையியே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் வறட்சி நீர் விநியோகம் தொடர்பில் பிரதேச சபையே நீர்வழங்கலை முழுமையாக மேற்கொள்ளும் என்றும் இதற்கான வழங்கள் யாவும் தற்போது சபையிடம் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் இரும்பு வியாபாரிகளை தடைசெய்ய வேண்டும் என ஏற்கனவே சபையில் தீர்மானிக்கப்பட்ட நிலையில் அது தொடர்ந்தும் நடைபெற்றுவருவதால் அதற்கான சட்ட நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றும் சபை உறுப்பினர்களால் வலியுறுத்தப்பட்டது.

இதனிடையே கடந்த 04.04.2019 அன்று வெளியான பத்திரியை ஒன்றில் வேலணை பிரதேச சபையில் 100 வாகனங்கள் இருப்பதாகவும் இதன் பயன்பாடுகள் எவ்வாறிருக்கின்றன என்பதை சபை உறுப்பினர்கள் அறிந்துகொள்ளவேண்டும் என்றும் சாரப்பட செய்தி வெளியாகியிருந்தது. இந்த செய்தி தவறானது என்றும் சபையிடம் 52 வாகனங்களே இருப்பதாகவும் தெரிவித்து அண்மையில் கணக்காய்வு செய்யப்பட்ட அறிக்கை சபையில் சமர்பிக்கப்பட்டிருந்தது. அந்தவகையில் வெளியான செய்தி குறித்த விளக்கமளிக்க வேண்டும் எனவும் குறித்த செய்திக்கு மறுப்பு தெரிவித்து செய்தி வெளியிட வேண்டும் என்றும் தவிசாளரிடம் உறுப்பினளர்கள் கோரிக்கை முன்வைத்திருந்தனர். இவ்விடயம் தொடர்பில் மறுப்பு செய்தி வெளியிடப்படும் என தவிசாளர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: