சுகாதாரத் தொண்டர்கள் சுகாதாரத் திணைக்கள அலுவலகம் முன்பாக உண்ணாவிரதம்!

Tuesday, March 15th, 2016

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் 34சுகாதாரத் தொண்டர்கள் தமக்கு நிரந்தர நியமனம் வழங்க வேண்டும் எனக்கோரி பண்ணையில் அமைந்துள்ள வடமாகாண சுகாதாரத் திணைக்கள அலுவலகம் முன்பாக இன்று (15) உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மத்திய அமைச்சினால் மாகாண சபைக்கு தமக்கு நியமனம் வழங்குமாறு அனுமதிக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது எனகூறி அனுமதிக் கடிதத்தின் பிரதியை எம்மிடம் தந்துள்ளனர். இருந்தும் நியமனக் கடிதம் இன்னமும் வழங்கப்படவில்லை. எனவே, வடமாகாண சுகாதார அமைச்சு உறுதிக் கடிதத்தை வழங்க வேண்டும் என மேற்படி சுகாதாரத் தொண்டர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

6 மாதகால ஒப்பந்த அடிப்படையில் தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலையில் பணியாற்றுவதற்காக பணிக்கு அமர்த்தப்பட்ட இவர்கள், தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் காணப்பட்ட தொண்டர்கள் பற்றாக்குறை காரணமாக ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.

‘6 மாதகாலம் ஒப்பந்தம் முடிந்த பின்னர், விரைவில் 700 பேருக்கு நியமனம் வழங்கப்படவுள்ளது. அதில், 34 பேருக்கும் முன்னுரிமையளிக்கப்படும்’ எனக்கூறி, மேலும் 3 மாதங்களுக்கு இவர்களுக்கான ஒப்பந்தத்தை வடமாகாண சுகாதார திணைக்களம் நீடித்தது.

இவர்களுடைய 3 மாத ஒப்பந்தம் கடந்த 2015 ஆம் ஆண்டு டிசெம்பருடன் முடிவுக்கு வந்தது. இதன் பின்னர் அவர்கள் பணியில் இருந்து நிற்காமல் தொடர்ந்தும் ஊதியமின்றி பணியாற்றி வருகின்றனர்.

ஊதியமின்றி பணியாற்ற வேண்டாம், நியமனம் வழங்கப்படும் போது பணிக்கு வருமாறு வடமாகாண சுகாதார திணைக்களத்தால் தெரிவிக்கப்பட்டது.

எனினும், தாங்கள் வேலையில் இருந்து நின்றுவிட்டால், தங்களை மறந்துவிடுவார்கள் என்றும், இதனால் தங்களுக்கான நியமனங்கள் கிடைக்காமல் போய்விடும் என்பதற்காக ஊதியமின்றி தொடர்ந்தும் நாளொன்றுக்கு 9 மணித்தியாலங்கள் கடமையாற்றுவதாக மேற்படி சுகாதாரத் தொண்டர்கள் தெரிவித்தனர்.

இவர்கள் கடந்த 10ஆம், 11 ஆம் திகதிகளில் நிரந்தர நியமனத்தை கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

வடக்கில் இதுவரை 59 பேருக்கு கொரோனா தொற்றுறுதி - மாகாண சுகாதார பணிப்பாளர் கேதீஸ்வரன் தெரிவிப்பு!
தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய தனியார்த்துறை நிறுவனங்களில் சுகாதார குழுக்கள் ஸ்தாபிப்பு - தொழ...
இலங்கையின் கட்டடக்கலை அடைந்த தரம் மற்றும் சிறப்பை மீட்டெடுக்க வேண்டும் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ...