சீனி, உப்புக்கு வரி அதிகரிக்கப்படும் : அமைச்சர் ராஜித!
Wednesday, December 7th, 2016
நாட்டின் தொற்றா நோயைக் கட்டுப்படுத்தும் நோக்கில் சீனி, உப்பு ஆகியவற்றின் வரியை அதிகரிப்போம். மேலும் ஜனவரி முதல் இரத்தப் பரிசோதனை அரச வைத்தியசாலைகளில் ஆரம்பிக்கப்படும் என சுகாதார சுதேச வைத்திய அமைச்சர் ராஜித சேனா ரத்ன தெரிவித்துள்ளார்.
புதிய வீதி ஒழுங்குமுறை வெற்றி அளித்துள்ளமையினால் 25,000 ரூபா தண்டப் பணத்தை நீக்க வேண்டாம் என ஜனாதிபதியிடம் நான் வலியுறுத்தினேன். அத்துடன் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 48000 ஆக அதிகரித்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை வரவு – செலவுத் திட்டத்தின் சுதேச வைத்திய, சுகாதார, போசனத்துறை அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்;
நாட்டின் சுகாதாரச் சேவையை மேம்படுத்தும் நோக்குடன் குடும்ப வைத்திய முறைமையை மேம்படுத்தத் திட்டமிட்டுள்ளோம் இதன் பிரகாரம் 50,000 பேருக்கு ஒரு வைத்தியர் என நியமிக்கவுள்ளோம். இதன்போது வீட்டுக்கு வீடு சென்று வைத்திய சேவையை முன்னெடுக்கவுள்ளோம்.
மேலும் ஜனவரி மாதம் முதல் அரச வைத்தியசாலைகளிலேயே இரத்தப் பரிசோதனை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளோம் தற்போது நாட்டில் ஔடத பற்றாக்குறை முழுமையாக நீக்கப்பட்டுள்ளளது.
சர்வதேச அளவில் இலங்கை சுகாதார சேவை முன்னிலை வகிக்கிறது. தொற்றும் நோய்களை பெருமளவில் கட்டுப்படுத்தி உள்ளோம். மலேரியா, நோய் நீக்கப்பட்டுள்ளது. எனினும் டெங்கு, எயிட்ஸ் நோய் மாத்திரமே மீதமுள்ளது. இவற்றில் எயிட்ஸ் நோய் பெருமளவில் குறைவடைந்தது எனினும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதன் காரணமாக டெங்கு நோய்த் தாக்கத்திற்கு உள்ளானோர் தொகை 48,000 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, புற்றுநோயை கட்டுப்படுத்த விசேட ஔடதம் கொள்வனவு செய்யப்படுகிறது. இதற்கு 90 இலட்சம் ஒதுக்க வேண்டியுள்ளது.
அத்துடன் ஔடத பற்றாக்குறை தற்போது நாட்டில் இல்லை. ஔடத பற்றாக்குறையை நீக்க விசேட மென்பொருள் கட்டமைப்பின் ஊடாக ஒன்லைன் திட்டம் மூலம் ஔடதங்களை வைத்தியசா லைகளில் பெற்றுக்கொள்ள முடியும்.
இதேவேளை, தனியார் வைத்தியசாலை எல்லைமீறிய கட்டணம் சேவைகளுக்கு பெறப்படுகிறது. இதன் காரணமாக தனியார் வைத்தியசாலையில் சேவைகளுக்கு கட்டுப்பாட்டு விலையை விதிக்கத் தீர்மானித்துள்ளோம்.
இதேவேளை, தொற்றா நோயை கட்டுப்படுத்தும் நோக்குடன் சீனி, உப்பு ஆகியவை மீதான வரியை அதிகரிக்க வேண்டும் என 2015 ஆம் ஆண்டு வலியுறுத்தினேன். அப்போது ஊடகங்கள் விமர்சனம் செய்தன. ஆனால் இங்கிலாந்தில் 2014 இல் இம்முறைமை நடைமுறைக்கு வந்துள்ளது. எனவே சீனி, உப்பு என்பவற்றின் வரியை அதிகரிக்கவுள்ளோம்.
அதேபோன்று வீதி விபத்துக்கள் இடம்பெற்றாலும் பாரிய செலவு முன்னெடுக்க வேண்டியுள்ளது. புதிய ஒழுங்கு விதிமுறை மூலமாக வீதி விபத்து 10 வீதம் குறைவடைந்தது. ஆகவே 25,000 ரூபா தண்டப் பணத்தை நீக்க வேண்டாம் என ஜனாதிபதியிடம் கோரினேன்.
அதேபோன்று அவசர சிகிச்சைப் பிரிவு உள்ளிட்ட புதிய வைத்தியசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. அத்துடன் கிராமப் புறங்களில் வைத்திய சிகிச்சைக்கூடங்களை நிறுவவுள்ளோம். அத்துடன் 25,000 ரூபா தண்டப் பணத்தை எதிர்த்தால் பஸ் உரிமையாளர்கள் சுகாதாரச் சேவைக்கு நிதி வழங்கட்டும் மது அருந்தி விட்டு வாகனம் செலுத்தி விபத்து ஏற்பட்டமைக்கு எம்மால் செலவிட முடியாது என்றார்.
Related posts:
|
|