சீனாவின் சினோபெக் எனர்ஜி லங்கா நிறுவனம் தமது உத்தியோகபூர்வ முதலாவது எரிபொருள் நிரப்பு நிலையத்தை ஆரம்பித்தது!.

Thursday, August 31st, 2023

சீனாவின் சினோபெக் எனர்ஜி லங்கா தமது உத்தியோகபூர்வ முதலாவது எரிபொருள் நிரப்பு நிலையத்தை கொழும்பில் உள்ள மத்தேகொடவில் ஆரம்பித்துள்ளது.

சந்தையில் தற்போது பெட்ரோல் மற்றும் டீசலுக்கான விலையை காட்டிலும் சினோபெக் எரிபொருள் நிரப்பு நிலையத்தின் ஊடாக 3 ரூபா குறைவாக லீட்டர் ஒன்றை பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஒக்டோபர் மாதத்திற்குள் 150 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக தமது செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு சினோபெக் நிறுவனம் தயாராகி வருகின்றது.

இலங்கையில் பெட்ரோலியப் பொருட்களை இறக்குமதி செய்தல், சேமித்தல், விநியோகம் செய்தல் மற்றும் விற்பனை செய்வதற்கான நீண்ட கால ஒப்பந்தம் ஒன்றில், மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சுடன் சினோபெக் நிறுவனம் கடந்த மே மாதம் கையெழுத்திட்டது.

இதன்மூலம் சினோபெக் நிறுவனத்திற்கு 150 எரிபொருள் நிலையங்களை இயக்குவதற்கான 20 ஆண்டுகால உரிமம் வழங்கப்பட்டுள்ளது.

ஏலவே, இரண்டு எரிபொருள் கப்பல்கள் சீனாவில் இருந்து இலங்கைக்கு வந்துள்ள நிலையில், குறித்த நிறுவனம் தமது எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களுக்கு எரிபொருளை விநியோகிக்கும் நடவடிக்கையை ஆரம்பித்திருந்தது,

இதன்மூலம் கட்டம் கட்டமாக குறித்த எரிபொருள் நிரப்பு நிலையங்கள் நாட்டில் திறக்கப்படவுள்ளன. சினோபெக் இலங்கை சந்தையின் நுழைவு அதன் ஆற்றல் வழங்கல்களுக்கு அப்பாற்பட்ட முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது.

சினோபெக் மற்றும் இலங்கை அரசாங்கத்திற்கு இடையிலான கூட்டு இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பு மீதான அழுத்தத்தை தணிக்க பங்களிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது

Related posts: