சர்வதேச தரத்திலான மருத்துவ வசதிகளை வழங்க யாழ் நகரில் நெரிசலற்ற சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும் – யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட பீடாதிபதி சுரேந்திரகுமார் கோரிக்கை!

Friday, March 1st, 2024

சர்வதேச தரத்திலான மருத்துவ வசதிகளை வழங்குவதற்கு நெரிசலற்ற அமைதியான சூழல் யாழ்ப்பாணத்தில் ஏற்படுத்தப்பட வேண்டும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட பீடாதிபதி பேராசிரியர் சுரேந்திர குமார் கேட்டுக்கொண்டார்.

கல்வி அமைச்சின் நிதியுதவியுடன்  மருத்துவ பீடத்திற்காக எட்டுமாடிகள் கொண்ட கட்டடம் ஒன்று யாழ் நகரத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது. குறித்த கட்டடத்திற்கான நிலத்தினை 2015 ஆம் ஆண்டு மாநகர சபை வழங்கியிருந்தது

குறித்த கட்டடத்தில் கல்வி, ஆய்வுகள் சேவைகள் என்பன இடம்பெறவுள்ளது. மேலும் மாணவர்களுக்கு கற்பித்தல் மற்றும் நோயாளர்களுக்கான சிகிச்சைகள் என்பனவும் முன்னெடுக்கப்படவுள்ளன. அத்துடன் மாணவர்கள், வைத்தியர்கள், தாதியர்களுக்கான நவீனத்துவமான பயிற்சிகளை வழங்குவதற்கான பயிற்சிகள் என்பனவும் வழங்கப்படவுள்ளது.

குறித்த சேவைகளை முன்னெடுப்பதற்கு எமக்கு சவாலாக இருப்பது நீண்ட தூரம் தரித்து நிற்கும் பேருந்துகள். நாம் யாரையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை இருப்பினும் இப்போது எமது கட்டடத்திற்கு முன்பாக தரித்து நிற்கும் பேருந்துகள் எமது மருத்துவ சேவைகளை முன்னெடுப்பதற்கும் குறிப்பாக நோயாளிகளின் ஆரோக்கியம் தொடர்பிலும் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்துவதாக மருத்துவ பீட பீடாதிபதி சுட்டிக்காட்டினார்.

மேலும், யாழ்.மாநகரசபை, மாவட்டச் செயலகம், ஆளுநர் அலுவலகம் ஆகியவற்றுடன் இணைந்து யாழ்ப்பாண ஆரோக்கிய நகரம் எனும் திட்டத்தினை உலக சுகாதார நிறுவனத்துடன் இணைந்து மேற்கொள்ளவுள்ளோம்.

குறித்த திட்டத்தினை மேற்கொள்வதற்காக உலக சுகாதார நிறுவனத்தின் இலங்கை பணியாளர்களும் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள பணியாளர்களும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் வருகைதரவுள்ளனர்.

எனவே எதிர்வரும் இரண்டு வருடங்களுக்குள் யாழ்ப்பாண நகரத்தினை ஆரோக்கிய நகரமாக மாற்றுவதற்கான வேலை திட்டங்களை அவர்கள் மேற்கொள்ளவுள்ளனர். அத்துடன் எதிர்காலத்திலும் அது நகரத்தினை ஆரோக்கியமாகவும் தூய்மையாகவும் வைத்திருப்பதற்கு வாகன நெரிசல் ஒரு இடையூறாக காணப்படுகிறது.

இந்த போக்குவரத்து இடையூறாகவும் விபத்துக்களை ஏற்படுத்தும் வகையிலும் அமைந்துள்ளது. மாநகரசபை எல்லைக்குள் இடம்பெறும் விபத்துக்கள் உலக சுகாதார நிறுவனத்தினால் பரிந்துரைக்கப்பட்டுள்ள அளவைக் காட்டிலும் அதிகமாக இடம்பெறுவதாகவும் அவர்கள் சுட்டிக் காட்டினர்.

எனவே இதற்கு காரணமாக உள்ள போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தி நகரத்தை தூய்மையாக பேணுவதற்கு அனைவரும் முன்வர வேண்டும் என்றும் இதன் போது கேட்டுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: