சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது பொலிஸாரின் கடமையே தவிர இராணுவத்தின் கடமை அல்ல – இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா அறிவிப்பு!

Sunday, May 15th, 2022

சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது பொலிஸாரின் கடமையே தவிர இராணுவத்தின் கடமை அல்ல என இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பில் பொலிஸ் மா அதிபரும் இராணுவத் தளபதியும் தமது சொத்துக்களைப் பாதுகாக்கத் தவறியதாக குற்றம் சுமத்தப்பட்டது.

இது பொலிஸாருக்குரிய விடயம் என்பதை அறிந்த ஜனாதிபதி, பொலிஸ் மா அதிபரை கூட்டத்திற்கு அழைத்திருந்தார்

எப்படியிருப்பினும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொலிஸ் மா அதிபர் மீது குற்றம் சுமத்தி வரும் நிலையில், தமது சொத்துக்களை பாதுகாக்க தவறிய இராணுவ தளபதி சவேந்திர சில்வாவும் பதவி விலக வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே தெரிவித்துள்ளார்.

இதன்போது இராணுவத் தளபதியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய ஜனாதிபதி, நாட்டின் சட்டத்திற்கு அமைவாக பொலிஸாரால் நிலைமையைக் கட்டுப்படுத்த முடியாவிட்டால், அவ்வாறான சம்பவத்தில் இராணுவம் தலையிடுமாறு பொலிஸார் கோரிக்கை விடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

எப்படியிருப்பினும் இவ்வாறான விடயத்தில் தலையிடுவதற்கு இராணுவத்திற்கு சட்டரீதியாக அனுமதி இல்லை என இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.

இதன் போது, வடமத்திய மாகாண முன்னாள் அமைச்சர் ஒருவர் தலையிட்டு கருத்து வெளியிட்டுள்ள நிலையில், இராணுவத்தினர் பார்த்துக் கொண்டிருக்கும் போதே மக்கள் தனது வீட்டிற்கு தீ வைத்ததாகவும் இராணுவம் ஒன்றும் செய்யவில்லை எனவும் குற்றம் சுமத்தியுள்ளார்.

இது தொடர்பில் இராணுவத் தளபதியிடமும் ஜனாதிபதி வினவியிருந்ததுடன், இராணுவத் தளபதி, குறித்த அமைச்சரிடம் அப்போது அவர் வீட்டில் இருந்தாரா என வினவியுள்ளார்.

கொழும்பில் உள்ள தனது வீட்டுக்கு சென்றிருந்த போதிலும் வடமத்திய மாகாணத்தில் உள்ளவர்கள் தமது வீட்டிற்கு தீ வைப்பதை சிசிடிவி கமராக்களில் பார்த்ததாக முன்னாள் அமைச்சர் பதிலளித்திருந்தார். இதன்படி குறித்த சிசிடிவி காட்சிகளை தமக்கு வழங்குமாறு இராணுவத் தளபதி கோரிக்கை விடுத்துள்ளதுடன், குறித்த காணொளிக் காட்சிகளின் மூன்று பகுதிகளை உடனடியாக இராணுவத் தளபதிக்கு அனுப்பி வைத்துள்ளார்.

அதனை பார்வையிட்ட இராணுவத் தளபதி, ஐந்து பொலிஸ் உத்தியோகத்தர்களைத் தவிர வேறு எவரும் சம்பவ இடத்தில் இல்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.

பொலிஸாரின் ஊடாக இராணுவத்தின் பாதுகாப்பு கோரிய சில வீடுகளுக்கு இராணுவம் பாதுகாப்பு வழங்கியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பிரசன்ன ரணதுங்கவின் கொழும்பிலுள்ள வீடு, கெஹலிய ரம்புக்வெல்லவின் கொழும்பிலுள்ள வீடு மற்றும் இராணுவத்தினால் பாதுகாப்பு கோரிய ஆறு வீடுகளின் சொத்துக்களை பாதுகாக்க இராணுவம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த வீடுகள் மற்றும் ஏனைய சொத்துக்களுக்கு தீ வைப்புத் தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டதாகத் தெரிகிறது என இராணுவத் தளபதி மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

00

Related posts: