கொக்குத்தொடுவாய் புதைகுழி அகழ்வு பணிகள் ஐந்தாவது நாளாக இன்றும் முன்னெடுப்பு!

Monday, September 11th, 2023

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் ஐந்தாவது நாளாக இன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளது

முல்லைத்தீவு நீதிமன்ற நீதவான் தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் இந்த அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

தொல்பொருள்துறை சிரேஸ்ட பேராசிரியர் ராஜ் சோமதேவ, முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி வாசுதேவ, தடயவியல் பிரிவினர் உள்ளிட்ட தரப்பினரின் பங்கேற்புடன் அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்பதாக கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கொக்குத்தொடுவாய் பகுதியிலே கடந்த ஜூன் மாதம் 29 ஆம் திகதியன்று, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினரால் நீர் குழாய்கள் பொருத்துவதற்காக நிலத்தை தோண்டியபோது அங்கு மனித எச்சங்கள் மீட்கப்பட்டிருந்தன.

இதனைத் தொடர்ந்து தொடர்ச்சியாக முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கு விசாரணையின் பின்னர் கடந்த கடந்த 6 ஆம் திகதி அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

அதன்போது, நேற்றுமுன்தினம் நான்கு மனித உடற்பாகங்கள் அடையாளம் காணப்பட்டதோடு அவற்றில் முழுமையான இரண்டு உடற்பாகங்கள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும், நேற்று அகழ்வுப் பணிகள் இடம்பெறவில்லை. இன்று ஐந்தாவது நாளாக இன்றும் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதுவரையில் துப்பாக்கி தோட்டாக்கள், புலிகள் அமைப்பினர் பயன்படுத்திய இலக்க தகடுகள், உடைகள் உள்ளிட்ட பல பொருட்கள் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: