கேப்பாப்பிலவு மக்களுக்கு பதில் கூறவேண்டியவர்கள் யார்? – ஈ.பி.டி.பியின் சர்வதேச முக்கியஸ்தர் விந்தன் கேள்வி
Tuesday, February 21st, 2017தமது நிலங்களை மீட்பதற்காக உணவு ஒறுப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கேப்பாப்பிலவு மக்களுக்கு பதில் கூறவேண்டியவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பா அல்லது அரசாங்கமா என்று ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் சர்வதேச முக்கியஸ்தர் விந்தன் கேள்வி எழுப்பியுள்ளார்.
கட்சியின் யாழ்ப்பாணம் பிரதேசத்தின் வட்டார செயலாளர் உடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் –
கேப்பாப்பிலவு மக்களின் குடியிருப்பு நிலங்களை அந்த மக்களுக்கு மீள ஒப்படைக்கவேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கே உண்டு. ஆனாலும் கடந்த தேர்தலின்போது தமது தேர்தல் விஞ்ஞாபனத்தினூடாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை பிரதானமாக கருத்தில் எடுக்கவேண்டும்.
நிலங்களை மீட்போம், படையினரை வெளியேற்றுவோம், காணாமல் போனவர்களை கண்டுபிடித்துத் தருவோம், அரசியல் தீர்வை பெற்றுத்தருவோம் என்று மக்களுக்கு வாக்குறுதிகளை வழங்கியவர்களே இந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பினர்.
நீங்கள் எமக்கு வாக்களித்தால் மட்டும் போதும் அனைத்தையும் நாம் பெற்றுத்தருவோம் என்று கூறிய தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இன்று எதையும் நிறைவேற்றாமல் நாடாளுமன்ற நாற்காலிகளில் மயங்கிக் கிடக்கின்றார்கள்.
90 களின் இறுதிப்பகுதியில் வலி வடக்கில் அன்றய அரசு காணிகளை சுவிகரிக்க எத்தனிக்க இருந்த போது எமது கட்சி நாடாளுமன்றத்தை பகிஸ்கரித்ததன் மூலம் அதைத் தடுத்து நிறுத்தியிருந்தது.
அன்று நாம் எமது மக்களின் நிலங்கள் சுவீகரிக்கப்பட்டதை தடுத்து நிறுத்தியது போல் இன்று அரசியல் பலத்தோடு நாடாளுமன்றத்தில் தொங்கிக்கொண்டிருக்கம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கேப்பாப்பிலவு மக்களுக்காக ஏன் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை?
கடந்த ஆட்சிக்காலத்தில் கூட நாம் போதிய அரசியல் பலம் இன்றியும் பதினேளாயிரத்து ஐநூற்று இருபத்தி இரண்டு (17522 )ஏக்கர் நிலங்களை நாம் மீட்டுக்கொடுத்திருக்கின்றோம்.
கிளிநொச்சியில் படையினர் வசமிருந்த அறிவியல் நகரை மீட்டெடுத்து அங்கு யாழ் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தையும் விவசாய பீடத்தையும் அமைத்துக் கொடுத்திருக்கின்றோம்.
ஆகவே கொட்டும் மழையிலும் , குளிர் பனியிலும், கொதிக்கும் வெயிலிலும் தமது குடியிருப்பு நிலங்களுக்காக தொடர் போராட்டத்தை நடத்திவரும் கேப்பாப்பிலவு மக்களுக்கு பதில் கூறவேண்டியவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரே. மக்களுக்கு கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் தமது நாடாளுமன்ற பலத்தை கேப்பாப்பிலவு மக்களுக்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் உரிய முறையில் பயன்படுத்தவேண்டும் என்றும் தெரிவித்தார்.
இச்சந்திப்பின் போது கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம்,, மாவட்ட நிர்வாக செயலாளர் கா வேலும்மயிலும் குகேந்திரன், மாவட்ட உதவி நிர்வாகச் செயலாளர் சிவகுரு பாலகிருஸ்ணன், கட்சியின் யாழ் மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளர் ஜயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன், கட்சியின் யாழ்ப்பாணம் பிரதேச நிர்வாக செயலாளர் றீகன், கட்சியின் யாழ்ப்பாணம் நகர நிர்வாக செயலாளர் ரஜீவ், கட்சியின் அலுவலக நிர்வாகச் செயலாளர் வசந்தன் அகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
Related posts:
|
|