குழாய்க் கிணறுகள் அமைக்கும் செயற்பாடுகளை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் – யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தீர்மானம்!

Thursday, April 18th, 2024

யாழ் மாவட்டத்தில் குழாய்க் கிணறுகள் அமைக்கும் செயற்பாடுகளை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் எனவும் அது தொடர்பில் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவால் துறைசார் தரப்பினருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டது.

யாழ் மாவட்ட செயலகத்தில் இன்றையதினம் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி குழு்  கூட்டத்திலேயே இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது

நிலக்கீழ் நீர் தொடர்பான ஆய்வுகள் உரியவாறு மேற்கொள்ளாது சில தனியார் நிறுவனங்கள் குழாய் கிணறுகளை அமைப்பதாக மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கூற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

இந்த விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அரச திணைக்களங்களுக்கு அறிவுறுத்தல் வழங்கிய ஒருங்கிணைப்புக் குழு,  விதிமுறைகளை மீறும் நிறுவனங்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்திருந்தது

இதேவேளை  வருட இறுதிக்குள் மீள் குடியேற்ற நடவடிக்கை நிறைவு செய்யப்பட வேண்டும் என  ஜனாதிபதி வழங்கியுள்ள பணிப்புரைக்கு அமைய, மீள்குடியேற்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது..

யாழ் மாவட்டத்தில் 1500 குடும்பங்களை சேர்ந்தவர்கள், நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளதாகவும் அவர்களை மீள்குடியேற்றுவது தொடர்பில் விசேட கூட்டம்  நடத்தப்பட வேண்டும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டது..

அத்துடன் ஏற்கனவே மீள்குடியேற்றப்பட்ட மக்களின் வீடுகளுக்கான மின்சார விநியோகம் தொடர்பில் துரித நடவடிக்கை எடுக்குமாறு துறைசார் அதிகாரிகளுக்கு  அறிவுறுத்தப்பட்டது.

இதேவேளை, வடக்கு மாகாணத்தில் காணி உறுதிப் பத்திரங்களை கைமாற்றும் செயற்பாடுகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டதுடன். “உரித்து” காணி உறுதிகளை வழங்கும் நடவடிக்கையை துரிதப்படுத்துவதற்காக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அதற்கமையை மே மாத நிறைவுக்குள்  வடக்கு மாகாணத்தில் 60,000 பேருக்கான  காணி உறுதிப் பத்திரங்கள் கையளிக்கப்படவுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது..

இதேவேளை வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள வீட்டுத் திட்டம் தொடர்பான கலந்துரையாடல்கள் மற்றும் திட்டமிடல்கள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாகவும் ஒரங்கிணைப்பு குழுவின் தலைவர்களால் தெரிவிக்கப்பட்டது.

அத்துடன் இந்த திட்டத்தில் நெடுந்தீவு மக்களுக்கான 76 வீடுகளும் உள்வாங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது..

இதேநேரம் நகர அபிவிருத்தி திட்டங்களின் போது பொதுமக்கள் இலகுவில் சேவைகளை பெற்றுக்கொள்ளும் வகையில் திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டதுடன் ஒவ்வொரு துறைசார் திட்டங்களும் வலயங்களாக பிரிக்கப்பட்டு பொதுமக்கள் இலகுவில் அணுகக்கூடிய வகையில் மேம்படுத்தப்பட வேண்டும் எனவும் அறிவறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: