கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்திற்கு அண்மையில் மீன்பிடி இறங்கு துறை: எதிர்த்து கவனயீர்ப்புப் போராட்டம்!
Monday, July 25th, 2016
ஈழத்தின் புகழ் மிக்க பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றாகவும், யாழ்ப்பாணத்தின் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றாகவும் விளங்கும் கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்திற்கு அண்மையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மீளக் குடியமர அனுமதிக்கப்பட்டுள்ள பகுதியில் மீன்பிடி இறங்குதுறைக்கான ஆரம்ப கட்டப் பணிகள் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சைவசமய அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்திற்கு முன்பாக நேற்று (24) பிற்பகல்- 3.30 மணி முதல் அமைதி வழிக் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் “புண்ணிய பூமியில் படகுத் துறையா? ஒரு போதும் வேண்டவே வேண்டாம்! “, “சைவசமயத்தை மாசுபடுத்த ஒரு போதும் அனுமதியோம்”, ” கடற்படையே மக்களின் கருத்தை மதி!”, ” மயிலிட்டி பலாலி இராணுவக் குடியிருப்பு..! புனிதப் பிரதேசத்தில் இறங்கு துறை அமைப்பா?”, “மாண்பு மிகு ஜனாதிபதி அவர்களே!கெளரவ அமைச்சர் அவர்களே! புண்ணிய பூமியில் படகுத் துறையா? அனுமதிக்க வேண்டாம்”, உள்ளிட்ட பல்வேறு பதாதைகளையும் தாங்கி எதிர்ப்பில் ஈடுபட்டனர்.
இதேவேளை, போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மீன்பிடி இறங்கு துறை நிர்மாணிக்கப்பட்டு வரும் பகுதி வரை ஆர்ப்பாட்டப் பேரணியாகச் செல்லவிருந்த நிலையில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த காங்கேசன்துறைப் பொலிஸ் அத்தியட்சகர் ஜவார் போராட்டக்காரர்களுடன் சுமூகமான முறையில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதுடன், குறித்த விடயத்தை மேலதிகாரிகள் மற்றும் உரிய தரப்பினரின் கவனத்திற்குக் கொண்டு சென்று உரிய தீர்வு பெற்றுத் தருவதாகவும் உறுதியளித்த காரணத்தால் ஆர்ப்பாட்டப் பேரணி கைவிடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|