ஒரு சில உயர் பெறுபேறுகளை வைத்துக்கொண்டு மாவட்டம் கல்வி நிலையில் உயர்ந்துவிட்டதாக தம்பட்டம் அடிக்க முடியாது – கல்வி நிலை பெரும் பின்னடைவையே சந்தித்துள்ளது – யாழ். மாவட்டத்தின் அரச அதிபர் சிவபாலசுந்தரம் சுட்டிக்காட்டு!

Monday, December 4th, 2023

அண்மையில் வெளியான க.பொ.த. சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளில் ஒரு சில உயர் பெறுபேறுகளை வைத்துக்கொண்டு யாழ் மாவட்டம் கல்வி நிலையில் உயர்ந்துவிட்டதாக தம்பட்டம் அடிக்க முடியாது. யாழ்ப்பாணத்தின் கல்வி நிலை பெரும் பின்னடைவையே சந்தித்துள்ளதாக யாழ் மாவட்ட செயலர் அ.சிவபாலசுந்தரம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

அண்மையில் வெளியான க.பொ.த. சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளில் ஒரு சில உயர் பெறுபேறுகளை வைத்துக்கொண்டு யாழ் மாவட்டம் கல்வி நிலையில் உயர்ந்துவிட்டதாக தம்பட்டம் அடிக்க முடியாது.

அதேவேளை அறிவு, திறன், மனப்பாங்கு மூன்றும் மாணவர்களிடம் சேர்ந்திருக்க வேண்டும். நாம் அறிவில் மாத்திரம் உயர்வடைவதால் எமது சமூகம் முன்னேறாது.

எங்களிடம் திறன், மனப்பாங்கு இரண்டும் இல்லை. அவற்றை வளர்ப்பதற்கு இணைப்பாட விதானச் செயற்பாடுகளே துணைபுரியும்.

இன்றைய பிள்ளைகள் இணைப்பாடவிதான செயற்பாட்டில் ஈடுபடுவதற்கு விருப்பம் உடையவர்களாக இருந்தாலும், பெற்றோருக்கு விருப்பம் இருந்தாலும் நேரமின்மை பெரிய பிரச்சினையாக இருக்கின்றது.

இதனால்தான் நான் தனியார் கல்வி நிறுவனங்களை ஆகக் குறைந்தது வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மூடும் முடிவை எடுத்தேன். அதற்கும் பலர் எதிர்ப்புத் தெரிவித்தார்கள். ஆனாலும் இந்த முடிவை நான் மாற்றப்போவதில்லை  எனவும் தெரிவித்துள்ளார்.

அதேவேளை இப்போது க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் யாழ். மாவட்டத்தில் பலருக்கு 9A வந்ததாக முகநூல்களில் போடுகின்றனர்.

அவர்களால் போரில் பின்னடைந்த இந்தச் சமூகத்தை கட்டியெழுப்பும் திறன் இருக்கின்றதா? இல்லை. எனவே திறன் மற்றும் மனப்பாங்கு இல்லாத கல்வியால் சமூகத்தில் எந்தவொரு மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: