கிளைபோசெட் மீதான இறக்குமதி தடை நீக்கம் – நிதி அமைச்சராக ஜனாதிபதி கையொப்பம்!

Monday, August 8th, 2022

2022 ஆகஸ்ட் 5 ஆம் திகதியன்று நடைமுறைக்கு வரும் வகையில் களைகொல்லியான கிளைபோசெட் மீதான இறக்குமதித் தடையை இலங்கையின் நிதி அமைச்சகம் நீக்கியுள்ளது.

நிதி அமைச்சராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கையொப்பமிட்ட வர்த்தமானியின் அடிப்படையில் தடைப்பட்டியலில் இருந்து கிளைபோசெட் நீக்கப்பட்டுள்ளது.

முன்னதாக 2015 ஆம் ஆண்டு களைகொல்லி இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்ட போதும், தேயிலை மற்றும் ரப்பருக்கு கிளைபோசேட் பயன்பாடு மூன்று ஆண்டுகளுக்கு மாத்திரம் அனுமதிக்கப்பட்டது.

2019 ஆம் ஆண்டில் மலர் வளர்ப்புத் தொழிலில் நோய் நீக்கம் மற்றும் நோயுற்ற கரும்புச் செடிகள் மற்றும் தென்னை மரங்களின் இலைவாடல் நோயை அகற்றுவதற்காக கட்டுப்பாட்டு அளவில் கிளைபோசெட்டை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட்டது.

2019 ஆம் ஆண்டில் 100 சதவிகித இயற்கை விவசாயத்திற்கு செல்ல அரசாங்கம் கொள்கை முடிவை எடுத்ததால் 2021ஆம் ஆண்டில் மற்றொரு வேளாண் இரசாயனத்துடன் கிளைபோசெட் மீண்டும் தடை செய்யப்பட்டது.

எனினும் வேளாண் இரசாயனங்கள் மீதான தடை பல மாதங்களுக்குப் பிறகு நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவியேற்றதன் பின்னர் இரசாயன உரங்கள் மற்றும் களைகொல்லிகளுக்கான இறக்குமதிக்கு தடையை விதித்திருந்தார்.

எனினும், இந்த இறக்குமதித்தடையை ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவி ஏற்றதன் பின்னர் நீக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: