காலையிலேயே சென்று வாக்களியுங்கள் யாழ் கிளிநொச்சி தேர்தல் மாவட்ட மக்களிடம் அரச அதிபர் மகேசன் வேண்டுகோள்!

Tuesday, August 4th, 2020

வாக்காளர்கள் காலையிலேயே சென்று வாக்களிப்பினை மேற்கொள்ளுங்கள் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.

நாளை இடம்பெறவுள்ள தேர்தல் தொடர்பாக நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

நாளை நடைபெறவுள்ள தேர்தலுக்கான சகல பூர்வாங்க ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு முடிவடைந்துள்ளன. இன்று காலையில் வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்கு பெட்டிகளும் தலைமை தாங்கும் சிரேஷ்ட உத்தியோகத்தர்களும் தேர்தல் மத்திய நிலையத்திலிருந்து வாக்களிப்பு நிலையங்களுக்கு ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த தேர்தலில் யாழ்ப்பாண நிர்வாக மாவட்டத்தில் 4 இலட்சத்து 79 ஆயிரத்து 584 வாக்காளர்களும் கிளிநொச்சி நிர்வாக மட்டத்தில் 92 ஆயிரத்து 264 வாக்காளர்களும் மொத்தமாக யாழ் தேர்தல் மாவட்டத்தில் 5  இலட்சத்து 71 ஆயிரத்து 848 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளார்கள்.  

அதேபோன்று யாழ் நிர்வாக மாவட்டத்தில் 508 வாக்களிப்பு நிலையங்களும் கிளிநொச்சி மாவட்டத்தில் 107 வாக்களிப்பு நிலையமுமாக மொத்தமாக 615 வாக்களிப்பு நிலையங்கள் யாழ் தேர்தல் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளன.

வாக்கெண்ணும் நிலையங்களை பொறுத்த வரையில் சாதாரண வாக்கெண்ணும் நிலையங்களாக யாழில் 73 நிலையங்களும் கிளிநொச்சியில் 14, மொத்தமாக 103 வாக்கெண்ணும் சாதாரண நிலையங்களும் அதேபோல் 16 தபால் மூல வாக்கு எண்ணும் நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. யாழ் தேர்தல் மாவட்டத்தில் மொத்தமாக7 பேர் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்படவுள்ளார்கள்.

அதற்காக 330 பேர் போட்டியிடுகிறார்கள். 19 அரசியல் கட்சிகளும் 14 சுயேட்சைக் குழுக்களை சேர்ந்த 33 கட்சிகள் போட்டியிடுகின்றன. இந்த தேர்தலில் தேர்தல் கடமைகளுக்கென 8235 உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள். இந்த தடவை விசேடமாக சுமார் 450 உத்தியோகத்தர்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவதற்கான பணியில் அமர்த்தியுள்ளோம் என தெரிவித்துள்ளார்.

Related posts: