காரைநகர் கடற்பரப்பில் கடந்த 18 ஆம் திகதி உயிரிழந்த இந்திய மீனவரின் உடலம் உறவினரிடம் ஒப்படைப்பு!

Saturday, October 23rd, 2021

இலங்கை கடற்பரப்பில் இடம்பெற்ற படகு விபத்தில் உயிரிழந்த தமிழக மீனவரின் சடலம் இந்திய கடலோர திணைக்களத்தினரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச கடல் எல்லையில் வைத்து இன்று(23) முற்பகல் 9.20 மணியளவில் குறித்த சடலம் கையளிக்கப்பட்டதாக கடற்படைப் பேச்சாளர், தெரிவித்துள்ளார்.

இதேநேரம், தமிழக மீனவரின் சடலத்தைப் பெற்றக்கொள்வதற்காக, புதுக்கோட்டை – கோட்டைப்பட்டிணத்திலிருந்து 2 விசைப்படகுகளில் 11 பேர் கொண்ட குழுவினர் சர்வதேச எல்லையை நோக்கி பிரவேசித்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளிளியட்டிருந்தன.

முன்பதாக யாழ்ப்பாணம் – காரைநகர் கோவளம் கடற்பரப்பில், கடந்த 18 ஆம் திகதி அத்துமீறி நுழைந்த இந்திய மீனவரின் படகு, இலங்கை கடற்படையினரின் படகுடன் மோதி விபத்துக்குள்ளானது.

இதன்போது இரு இந்திய மீனவர்கள் மீட்கப்பட்டு கைதுசெய்யப்பட்ட நிலையில், ஒருவர் காணாமல்போயிருந்தார்.

அவரைத் தேடும் பணிகளை கடற்படையினர் முன்னெடுத்திருந்த நிலையில், கடந்த 20 ஆம் திகதி அவரின் சடலம் மீட்கப்பட்டு, காங்கேசன்துறை கடற்படை தளத்திற்கு கொண்டுவரப்பட்டது.

இதையடுத்து, தடயவியல் மற்றும் நீதிவான் பரிசோதனைகள் இடம்பெற்றதன் பின்னர், பிரேத பரிசோதனைக்காக சடலத்தை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்நிலையில், குறித்த மீனவரின் சடலம் இன்று இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: