கட்டுக்கோப்பில்லாது வளரும் பிள்ளைகள் மறியல் சாலையில் நல்வழிப்படுத்தப்படுவர் – மேல்நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் !

Saturday, March 24th, 2018

பெற்றவர்கள் பிள்ளையை கட்டுக்கோப்புடன் வளர்க்கத் தவறின் நீதிமன்றம் அவர்களை மறியல் சாலைக்கு அனுப்பி நல்வழிப்படுத்தும் என யாழ்ப்பாண மேல்நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் பெற்றோருக்கு எச்சரிக்கை விடுத்தார்.

ஆவா குழுவைச் சேர்ந்தவர் என குற்றம் சாட்டப்பட்ட இளைஞர் ஒருவர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் கடை ஒன்றின் மீது பெற்றோல் குண்டு வீசினார் என சி.சி.ரி.வி. ஆதாரத்தை வைத்து யாழ்ப்பாண பொலிஸார் கைது செய்தனர்.

குறித்த இளைஞர் கடந்த 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21 ஆம் திகதி முதல் யாழ்ப்பாண நீதிவான் மன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் சட்டத்தரணி சர்மினி விக்னேஸ்வரன் குறித்த இளைஞரை பிணையில் செல்ல அனுமதிக்க வேண்டும் என யாழ்ப்பாண மேல் நீதிமன்றில் நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் பிணை விண்ணப்பம் செய்தார்.

அதனையடுத்து அரச சட்டவாதி நாகரத்தினம் நிஸாந்த் இளைஞர் பிணையில் செல்ல ஆட்சேபனை இல்லை என மன்றில் தெரிவித்ததையடுத்து சந்தேகநபர் 50 ஆயிரம் ரூபாய் காசுப் பிணையிலும் 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு ஆள் பிணையிலும் செல்ல நீதிபதி அனுமதித்தார்.

சந்தேக நபர் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் காலை 9 மணிக்கும் 12 மணிக்கும் இடையில் கையொப்பம் இட வேண்டும். கடவுச்சீட்டு இருந்தால் அதனை யாழ்ப்பாண நீதிவான் மன்றில் ஒப்படைக்க வேண்டும். வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கப்படுகின்றது என தெரிவித்தார். அத்துடன் குறித்த கட்டளையை குடிவரவு குடியகழ்வு திணைக்களத்துக்கு அனுப்பி வைக்குமாறு பதிவாளருக்கு பணிப்புரை விடுத்தார்.

Related posts: