கடைகளில் விற்பனையாகும் மருந்துகளை நம்பி ஏமாற்றமடைய வேண்டாம் – கொரோனா தொடர்பில் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

Thursday, February 6th, 2020

கொரோனா வைரஸ் தொற்றை குணப்படுத்துவதாக பிரசாரம் செய்து கடைகளில் விற்பனையாகும் மருந்துகளை நம்பி ஏமாற்றமடைய வேண்டாம் என மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் நேற்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்ட அரசாங்க ஆயுர்வேத வைத்தியர் சங்கத்தின் வைத்தியர் டெனிஸ்டர் எல்.பெரேரா இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார்.

அத்துடன் வைரஸ் என்பது விஞ்ஞான துறை மற்றும் மருத்துவ துறைக்கு எப்போதுமே பாரிய சவாலான ஒரு விடயம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொரோனா போன்ற வைரஸை நுண்ணுயிர் கொல்லி மாத்திரைகளினால் கட்டுப்படுத்த முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

எனினும் கொரோனாவை கட்டுப்படுத்துவதாக இலங்கையில் மருந்துகள் விற்பனையாகின்றதுடன், இந்த நோயை குணப்படுத்த என்னால் முடியும் என எந்தவொரு தனி நபரால் கூறப்பட்டாலும் விஞ்ஞான ரீதியாக அவ்வாறு முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.

சீன அதிகாரிகளாலும் இன்னும் உரிய மருந்தினை கண்டுபிடிக்க முடியாமல் உள்ள நிலையில், இலங்கை கடைகளில் லேபல் மாற்றி விற்பனை செய்யப்படும் மருந்துகளை தான் அவதானித்ததாக கூறிய அவர் , இவ்வாறு விற்பனை செய்யப்படும் மருந்தை நம்பி ஏமாற வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார்.

Related posts: